No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... பழி தீர்க்க துடித்த பிள்ளை...!!

Feb 20, 2023   Ramya   180    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளம் விக்ரமாதித்தனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.

ஒரு ஊரில் சரண்யன் என்ற மிகப்பெரும் செல்வந்தர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தைக்கு நம்பி என்று பெயர் சூட்டி போற்றி வளர்த்தார். பிறப்பிலிருந்தே சற்று மந்த புத்தி கொண்ட நம்பியை கல்வி கற்க அவ்வூரிலுள்ள ஒரு குருகுலத்தில் சேர்த்தார். அங்கு சேர்ந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இதனால் கவலையடைந்த சரண்யன் ஒரு ஜோதிடரை நாடினார்.

நம்பியின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர் ஒருவர் நம்பிக்கு கிரக நிலைகள் எதுவும் சரியில்லை, எனவே அவன் வித்யாவனம் எனும் ஊரில் உள்ள ஞானேந்திரர் குருகுலத்தில் சேர்ந்து கல்வி பயின்றால், சில காலத்திற்கு பின் அவன் அறிவில் சிறந்த மாணவனாக மாறுவான் என கூறினார். இதை கேட்ட சரண்யனும் அவ்வாறே செய்தார்.

இக்குருகுலத்தில் சேர்ந்த பின்பும் நம்பியின் மந்த புத்தி மாறவில்லை. அப்போது அக்குருகுலத்தில் பக்கத்து ஊரை சேர்ந்த சுகுமாரன் என்பவன் கல்வி கற்க சேர்ந்தான். அவனின் சிறந்த கல்வியாற்றலால் சிறந்த மாணவன் என அனைவராலும் பாராட்டப்பட்டான். இதை கண்ட நம்பி சுகுமாரனுடன் நட்பு கொள்ள எண்ணினான்.

அப்போது சுகுமாரனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. தன் தந்தைக்கு கடன் சுமை அதிகமாகிவிட்டதால் தன் கல்வியை நிறுத்திவிட இருப்பதாக தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். இதை கேட்ட நம்பியின் தந்தை சரண்யன், சுகுமாரனை தன் மகன் போல் எண்ணுவதாகவும், அவன் கடன் பிரச்சனையை தாம் தீர்ப்பதாகவும் கூறினார்.

இதை கேட்டு மகிழ்ந்த சுகுமாரன் இனி நம்பி அறிவாற்றலிலும், கல்வியிலும் சிறந்து விளங்க தான் உதவுவதாக நம்பிக்கு உறுதியளித்தான். நம்பியும் சில காலத்திலேயே அறிவில் சிறந்த மாணவனாக மாறினான். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த குரு ஞானேந்திரர் என்னால் செய்ய முடியாததை உன்னால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது? என்று சுகுமாரனிடம் கேட்டார்.

மற்றவர் நம்பியை முட்டாள் என்று கேலி மட்டுமே செய்தனர், ஆனால் தான் நம்பியிடம் அவன் ஒரு சிறந்த அறிவாளி என்று பாராட்டி ஊக்கப்படுத்தியதால், அவனே உற்சாகத்துடன் கல்வி பயில ஆரம்பித்து சிறந்த மாணவனாக மாறியதாக சுகுமாரன் கூறினான்.

சில ஆண்டுகள் கல்வி பயின்று முடிந்த பின் குரு ஞானேந்திரரிடம் விடை பெற வந்த சுகுமாரன் தன் தந்தையை ஏமாற்றி அவரை கடனாளியாக்கிய தன் உறவினர்களை பழி தீர்க்க போவதாக குரு ஞானேந்திரரிடம் கூறினான்.

இதை கேட்ட ஞானேந்திரர் இப்பழிவாங்கும் செயலை விட்டுவிட்டு, அவர்களை மன்னித்து விடுமாறு சுகுமாரனுக்கு அறிவுறுத்தினார். அப்போது அங்கிருந்த சரண்யன், சுகுமாரன் எடுத்த முடிவிற்கு தான் உதவுவதாக கூறினார். சரண்யன் இப்படி கூறியதை கேட்ட ஞானேந்திரர் இவ்விஷயத்திற்கு சரியான வழிமுறையை அறிவில் சிறந்தவனாகிவிட்ட உங்கள் மகன் நம்பியிடம் கேளுங்கள் என கூறினார்.

சரண்யனும், நம்பியிடம் நடந்த எல்லாவற்றையும் கூறி அதற்கான சரியான தீர்வை கேட்டார். சிறிது ஆலோசனைக்கு பின் சுகுமாரா, என் தந்தை உனக்கு செய்த உதவிகளெல்லாவற்றையும் மறந்து, அவரை பகைவராக எண்ணி பழி தீர்த்த பின் நீ உன் உறவினர்களை பழி தீர்க்கலாம் என்று கூறினான்.

அப்போது வேதாளம், விக்ரமாதித்தனிடம் நம்பி ஏன் அவ்வாறு கூறினான்? என்று கேள்வி கேட்டது.

சற்று நேரம் யோசித்த விக்ரமாதித்தன் தனக்கு பல முறை உதவிகள் செய்த நம்பியின் தந்தை சரண்யனை, சுகுமாரனால் ஒரு போதும் பகைவராக கருத முடியாது. மாறாக அவர் தனக்கு செய்த நன்மைகள் மட்டுமே அவன் நினைவிற்கு வரும். அது போல ஒருவர் நமக்கு செய்த தீமைகளை மறந்து விட்டு, அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொண்டால், நம்மிடம் பழிவாங்கும் உணர்ச்சி மறையும். இந்த மனோதத்துவத்தை நன்கு அறிந்தே, நம்பி இவ்வாறு சுகுமாரனிடம் கூறினான் என்று விக்ரமாதித்தன் வேதாளத்திடம் பதிலளித்தான்.


Share this valuable content with your friends