No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - உயிர்பிழைத்த சீதத்தனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

Feb 17, 2023   Ramya   191    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி - உயிர்பிழைத்த சீதத்தனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

🌟 உயிர் பிழைத்தவன் தன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய முயற்சிகள் பல மேற்கொண்டான். சுற்றிலும் இருள் சூழ்ந்து காற்றின் வேகம் அதிகரித்த வண்ணமாகவே இருந்தது. ஆனால் அப்போதைய சூழ்நிலையில் அவனால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காற்றின் திசைக்கு ஏற்பவும் அலைகளின் வேகத்திற்கு ஏற்பவும் தன்னுடன் வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று இருப்பார்களா? அல்லது அவர்கள் அனைவரும் நடுக்கடலில் மூழ்கி இறந்து விட்டார்களா? அல்லது தப்பித்துக் கொண்டார்களா? என்பது தெரியவில்லையே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

🌟 பயணம் மேற்கொள்ளும் பொழுது உறவினர்கள் கூறிய அனைத்தும் அவன் நினைவுக்கு வர துவங்கியது. தன்னுடைய ஊரில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தவர்களை புதிய தேசங்களுக்கும், நாடுகளுக்கும் அழைத்துச் செல்வதாக ஊக்கம் கொடுத்து அவர்களை அழைத்து வந்து அவர்களது குடும்பத்தினர் பார்க்க முடியாத பட்சத்தில் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்ததை எண்ணி கவலையும், அச்சமும் அடைந்தான். அந்த எண்ணத்தின் விளைவாக அவன் மனமும், உடலும் தளரத் தொடங்கியது. உடைந்த படகில் சிறு மரக்கலம் ஒன்று அவன் கண்களுக்கு அகப்பட அதில் ஏறிக் கொண்டான்.

🌟 கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் நீரும், காற்றின் வேகம் மட்டும்தான் நீண்டுகொண்டே சென்றது. தன்னிடத்தில் இருக்கக்கூடிய ஒரு கட்டுமரத்தின் சிறு துண்டுகளை கொண்டு நம்மால் கரை ஏற முடியும் என்ற நம்பிக்கை அவன் ஆழ்மனதில் சிறிதளவு இருந்து வந்தது.

🌟 கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் இதை நன்று பற்றிக்கொண்டு நம் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தன்னுடைய மனைவியையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் எண்ணிக்கொண்டே திக்கு தெரியாத கடலில் ஓரளவு தானறிந்த நீச்சலை கொண்டு நீந்தி பெயர் தெரியாத ஒரு மணல் மேட்டின் ஒரு பகுதியை அடைந்தான்.

🌟 எட்டுத் திக்குகளிலும் நீர், மண் இவற்றைத் தவிர வேறு எதுவும் தன்னுடைய கண்களுக்கு புலப்படவில்லை.


🌟 கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் கடலில் மூழ்கியதை எண்ணி மீண்டும் மனம் வருந்தினான். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தன்னுடைய மனைவியான பதுமை எடுத்து உரைத்தும் அதைக் கேட்காமல் இன்று இவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோமே என்று வருந்தினான்.

🌟 தன்னுடைய மனைவியின் கழுத்தில் கட்டிய தாலி கயிறு நிலைக்குமா? அதை காப்பாற்ற இயலுமா? என்று மிகவும் ஏங்கினான். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்த அவனுடைய மனமும், உடலும் பதட்டத்திலும், பயத்திலும் நிறைந்திருந்தது.

🌟 சிந்தனைகளில் தெளிவில்லாமல் குழப்பமும், எதிர்கால நிலை என்ன? என்ற தவிப்பும் அவனிடத்தில் மேம்பட்டு காணப்பட்டது. அந்த தவிப்பின் ஒரு பாதிப்பாக ஒருவேளை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றால் இங்கேயே உணவின்றி, தனிமையில் சிக்கி எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் நம்முடைய உயிரை இழந்துவிடுவோமோ என்று அஞ்சினான்.

🌟 இனி என்ன நிகழப் போகின்றது என்பதை தெரியாமல், என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை? என்னுடன் வந்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்களா அல்லது இருக்கின்றார்களா? என்று தெரியாமலேயே என்னுடைய உயிரானது இவ்விடத்தில் சென்றுவிடுமோ என்று பலவிதமான சிந்தனைகளுடனும், குழப்பங்களுடனும் மணல் திட்டில் இருந்து சிறிது தூரம் தன்னுடைய நடை பயணத்தை மேற்கொண்டான்.

🌟 அந்த இடத்தில் அவன் கண்ட சிறு காட்சியானது அவனுடைய மனதில் ஒரு பெரும் மாற்றத்தையும், ஒரு நம்பிக்கையையும் உருவாக்கியது.

🌟 சற்றுத் தொலைவில் ஒரு பொழிலைக் கண்டான். ஞாழலும், புன்னையும் பூத்துக் கிடந்தன. நண்டுகள் பக்கத்தில் இருந்த அன்னத்தைக் கண்டு மருண்டு ஒதுங்கவில்லை. அந்த அன்னங்கள் அவற்றைக் கண்டும் காணாமல் தவயோகிகளைப் போல அவற்றைத் தின்னாமல் விட்டு வைத்தன.

🌟 பூத்த மலர்களை உடைய பொழிலையும், அதை அடுத்து இருந்த அகிம்சா மூர்த்திகளாக விளங்கிய அன்னப் பறவைகளையும் கண்டதும் அவனுக்கு உயிர் தப்ப முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

🌟 இருளில் சிக்கியவனுக்கு ஒளி கிடைத்தது போல தப்பிப்பதற்கு வழி பிறந்துவிட்டது என்று அந்தப் பொழிலை நோக்கி விரைந்து சென்றான். தன்னுடைய நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிட்டன என்பதை அறிந்ததும், அவன் உடலில் இருந்துவந்த அவ்வளவு சோர்வும், மன வருத்தங்களும் நொடியில் அவனை விட்டு அகன்றன.

🌟 பொழிலை அடைந்து பலவாறாக யாராவது இருக்கின்றார்களா? என்று கழுகுப்பார்வை கொண்டு தேடிக்கொண்டிருந்தான். யாராவது தன்னை வந்து பார்க்க வருவார்களா? என்று எதிர்பார்த்தான். ஆனால் அவனுடைய முயற்சிகள் அனைத்தும் எந்தவிதமான பயனும் அளிக்கவில்லை.


🌟 மாறாக யாரும் அவ்விடத்தில் இல்லை. குழப்பத்தில் இருந்த மனமும், அவனுக்கு பலவிதமான கற்பனைகளையும் ஏற்படுத்தியது. துன்பத்தில் சிரிப்பது தான் அனைத்தையும் கடந்து செல்வதற்கான முதல் படி என்பதை நன்கு அறிந்திருந்தானோ என்னவோ சீதத்தன்.

🌟 அவனுடைய மனதில் வன தேவதை ஒருத்தி அவ்விடத்தில் தோன்றி தனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அன்னமிட்டு ஆதரிப்பது என்ற ஆவலும் ஏற்பட்டது. ஒருவேளை காட்டு மனிதர்களும் அல்லது வேட்டையாடுபவர்கள் யாரேனும் இவ்வழியாக வந்து தன்னை காப்பாற்றி செல்வார்கள் அல்லது பல பயணங்கள் மேற்கொள்ளும் மரக்கலங்கள் ஏதேனும் இவ்வழியாக சென்று தன்னிடம் அருள் காட்ட முடியும் என்ற நம்பிக்கையும் அவனிடத்தில் தோன்றியது.

🌟 அந்தப் பொழிலில் இருக்கக்கூடிய சிறு குச்சிகளையும், மரங்களையும் கொண்டு அவ்விடத்தில் மனித நடமாட்டம் இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கினான்.

🌟 அனைத்து சூழ்நிலைகளையும் தன்னால் முடிந்த அளவு உருவாக்கிய சீதத்தனுக்கு அவன் மனதில் ஒரு சிறு ஆசையும் தோன்றியது. அதாவது விண்ணுலகத்தில் இருந்து யாரோ ஒரு தேவதூதன் தன்னை வந்து அழைத்து சென்று அறுசுவை நிறைந்த உணவுகள் விருந்து வைத்து உபசரிப்பான் என்ற ஆவலும் அவனிடத்தில் தோன்றாமல் இருக்கவில்லை.


Share this valuable content with your friends