👫 ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினமாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது இந்த விழா.
ரக்ஷாபந்தன் சிறப்பு :
👫 ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக்கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்படும் ராக்கி திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தி அவர்களை இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது.
கொண்டாடும் முறை :
👫 ரக்ஷா பந்தன் நாளில் பெண்கள் புத்தாடைகள் அணிந்து தங்கள் சகோதரர்களை காணச் செல்வார்கள். எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ, அத்தனை பேரின் கைகளிலும் ராக்கியை கட்டுவார்கள்.
👫 இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள்.
👫 மேலும், இந்த நாளில் சகோதரிகள் சகோதரர்களுக்காக ராக்கியை தயாரிக்க வேண்டும். சிறிய விளக்கு, மஞ்சள் கலந்த அரிசி, குங்குமம், இனிப்பு, ராக்கி கயிறு ஆகியவற்றை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.
👫 பின் தரை மீது மரப்பலகையை வைத்து, நான்கு பக்கத்திலும் ரங்கோலி வரைந்து, இந்தப் பலகையின் மீது சகோதரரை உட்கார வைக்க வேண்டும். சகோதர, சகோதரிகள் ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர், சகோதரரின் நெற்றியில் சகோதரி குங்குமம் வைத்து, ஆரத்தி எடுத்து, கையில் ராக்கியை கட்ட வேண்டும். அவரது தலையில் அட்சதை போட்டு வாழ்த்தி, இனிப்பு வழங்க வேண்டும். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவார்கள்.
👫 எல்லா வித்தியாசங்களையும் மறந்து எந்த வேறுபாடுமின்றி சொந்தங்களாக எண்ணிக் கொண்டாடும் இந்தத் திருநாள், இந்தியாவின் கலாச்சார பெருமையை எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள். இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டலாம்.
ராக்கி கட்ட உகந்த நேரம் :
👫 பௌர்ணமி நாளில் மதியத்திற்கு மேல் வரும் அபரணா எனப்படும் நேரம் உகந்தது. இல்லையென்றால், பிரதோஷ காலமும் உகந்தது. ஆனால், பத்ரா எனப்படும் நேரத்தில் ராக்கி கட்டக்கூடாது. இந்த நேரம் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. பெரும்பாலான விரத புத்தகங்களில் நல்ல விஷயங்களுக்கு பத்ரா நேரம் தவிர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பௌர்ணமியின் முதல் பாதியில் பத்ரா வருகிறது. ராக்கி கயிற்றை கட்ட பத்ர முக்தா நேரத்தை ஒதுக்கி பத்ர பஞ்சா நேரத்தில் ராக்கி கயிற்றை கட்ட வேண்டும்.