வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்திற்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும்.
விரதத்தின் மகிமை :
🌟 பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாக திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலியின் வேடம் தரித்து, சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைபிடிக்கும் படி கூறினார்.
🌟 மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள். அப்படி விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகள் சியாமபாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்று பக்தியுடன் விரதத்தை கடைபிடித்தாள்.
🌟 விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள். ஆனால், லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், வறுமையில் வாடத்தொடங்கினர். விவரம் அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால், அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. ஆகையால் சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள்.
🌟 அவர்களும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து பூஜை செய்தாள். விரதத்தின் மகிமையால் சுரசந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். ஆகவே வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள்.
விரதத்தின் பலன்கள் :
🌟 மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
🌟 உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
🌟 மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
🌟 திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.