🌟 ஒவ்வொரு மாதத்திற்கும் சில நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால், சிறப்பான சீதோஷ்ணம் காணப்படும். எனவேதான் இந்த நாளில் இறைவனிடம் நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம்.
🌟 மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர். கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார். அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே.
🌟 ஆவணி மூலத்திருநாள் அசுர சக்திகளை வென்று ஒழிப்பதற்குத் துணை செய்கிறது. மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி என்னும் அசுரன். அதனால் அசுர சக்தியின் செல்வாக்கு சொக்கனின் மேல் ஏற்படும். நம் பக்தி உணர்ச்சியின் மூலம் அதனை ஒழிக்க வேண்டும் என்பர்.
சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் :
🌷 மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். அதாவது, மாணிக்கவாசக சுவாமிகளைப் பாண்டிய மன்னன், அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில் இருந்தும் மீறியதற்காக, சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார்.
🌷 சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.
வந்தி பாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலை :
🌞 அக்காலத்தில் வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும் மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி வந்தி என்ற பிட்டுவிற்கும் ஏழை மூதாட்டிக்கு வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டது.
🌞 முதுமை காரணமாக, அவரால், தனது பகுதி வேலையை செய்ய முடியவில்லை. ஏழை மூதாட்டியார் மற்றவர் உதவியை நாடினார். கூலியாள் வடிவில் வந்த, சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார்.
🌞 கூலியாளாக வந்த சிவபெருமான் தனது வேலையைச் செவ்வனே செய்யாது, ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். இதை கவனித்த மேற்பார்வை அதிகாரிகள், அவரை எழுப்பி வேலையை திருந்தச் செய்யக் கட்டளையிட்டனர். அது பலனளிக்காது போகவே கூலியாளுக்கு தண்டனை வழங்கினர்.
🌞 அத்தண்டனை ஒரு சவுக்கடியாக அமைந்தது. சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். தனது பிழையையும் உணர்ந்தான் என சமய நூல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இத்தினம் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
விழாக்கள் :
🌹 ஆவணி மூலத்திருவிழாவானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
🌹 சொக்கர் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களின் நினைவாக 10 திருவிளையாடல்கள் இத்திருவிழாவின்போது நடத்தப்படுகிறது.
🌹 ஆவணி மூலத்திருவிழாவின்போது சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. அடுத்த ஐந்து மாதங்கள் சுந்தரேஸ்வரர் மதுரையை ஆட்சி செய்வார்.