மார்கழி மாதம் என்றால் தேவர்கள் விழிக்கும் மாதம் என்பார்கள். அதனால் சகல ஆலயங்களில் அதிகாலை முதலே பூஜைகள் நடக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள பல நண்பர்கள் இந்த மாதத்தில் விடியற்காலை 4 மணிக்கே விழித்து எழுந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் தங்களது வீட்டிலே தீபம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் வீட்டில் ஏற்றும் தீபம் பெரும்பாலும் பூஜையறையிலேயே ஏற்றுவார்கள்.
அந்த பூஜையறை உங்களது வீட்டில் சரியான இடத்தில் தான் உள்ளதா? அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சனைகளில் முதலாவதாக வருவது கடன் பிரச்சனையே. கடன் பிரச்சனையால் கஷ்டப்படும் ஏராளமான நண்பர்கள் வீட்டில் பூஜையறை மிக தவறான இடத்தில் இருப்பதை நான் கண்டுள்ளேன்.
பூஜையறை வரக்கூடாத இடங்கள் :
1. வடகிழக்கு பகுதியில் பூஜையறை வரும் போது அது முற்றிலும் மூடப்பட்ட வீடாக மாறிவிடுகிறது.
2. தென்மேற்கில் பூஜையறை வரும் போது மாஸ்டர் பெட்ரூம் இடம் மாறி விடுகிறது. இவைகளே கடன் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம்.
பூஜையறை தவறினால் கடன் பிரச்சனை வரும்போது வாழ்க்கையில் மேலும் பல பிரச்சனைகள் தலைதூக்கும். அதாவது தந்தைசொல் மகள் கேட்காத நிலை, குறித்த வயதில் திருமணம் ஆகாத நிலை, குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது, விபத்துக்களை சந்திப்பது, ஜாமீன் போட போய் கடன் நாம் கட்ட கூடிய சூழ்நிலை ஏற்படுவது, திடீர் பொருளாதார இழப்பு, குழந்தைகளை ஹாஸ்டலிலே தங்கவைத்து படிக்க வைக்கும் நிலை, வெளிநாடு சென்று அங்கேயே இருந்து கொள்வது, மனநலம் பாதிப்பு, சுய சிந்தனை இழந்த நிலைகள் இதுபோல குறிப்பிடும் படியான பல பாதிப்புகள் வர நேரிடும்.
நான் குறிப்பிடும் பலன்கள் அனைத்தும் பொதுவானவைகள். இடத்திற்கு இடம், ஆட்களுக்கு ஆட்கள் மாறுபடும். யாருடைய இடத்தையும் பார்க்காமல் ஒரு தீர்க்கமான முடிவு கூற இயலாது.