சிவபுராணம் : பார்வதிதேவி சிவலிங்கத்தை பூர்த்தி செய்தாரா? பாகம் - 37
Jun 28, 2018 Vahini 497சிவபுராணம்
நாரதர் தேவியிடம் வந்திருப்பவரை புதிய நபராக கருதாமல் தங்களின் உடன்பிறப்பாக எண்ணி தங்களின் மனதில் எண்ணிய சிலையை முடித்து தருமாறு கூறினார்.
இருப்பினும் தேவி அவர்கள் எவ்வலியாயினும் அதை நானே நிறைவு செய்வேன் என்று கூறினார். பின்பு நாரதர் தேவியிடம் எடுத்துரைக்க தன் மனதில் விருப்பம் இல்லை என்றாலும் நாரத ரிஷியின் அறிவுரைகளை ஏற்று அருகில் இருந்த மங்களகரமான மஞ்சள் நிற கயிற்றை எடுத்து சிற்பியின் கைகளில் அவரின் மனைவி அருகில் அமர்ந்து இருக்க தேவி பார்வதி அணிவித்தார்.
இக்காட்சியானது நாரதர் பார்வையில் மாற்று உருவத்தில் இக்குடிலை அடைந்த சிற்பியாகவும் அவரின் மனைவியின் உண்மை உருவமான வைகுண்டத்தில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியுடன் உள்ள நாராயணனின் கைகளில் தேவி பார்வதி தங்களை தன்னுடைய தமையனாக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் கயிற்றை கட்டினார்.
இந்த காட்சியை காண தான் என்ன தவம் செய்தேனோ என தன் மனதில் அகம் மகிழ்ந்தார் நாரதர். பார்வதி தேவி செய்த பல லிங்கத்தை எம்பெருமானான சிவபெருமான் பூர்த்தியாகாமல் தடுத்தார்.
ஆனால், நாராயணன் கையால் உருவாகும் சிவலிங்கத்தை என்னால் மட்டுமின்றி எவராலும் எவ்விதம் நிறைவேறாமல் தடுக்க இயலும் என சிவபெருமான் எண்ணி எவ்விதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் அமைதி காத்தார்.
பின்பு சிற்பியான நாராயணன் தனது சகோதரியான பார்வதி தேவியின் விருப்பமான சிவலிங்கத்தை பூர்த்தி செய்தார். ஆனால், பார்வதி தேவி சிற்பியை கண்டு தாங்கள் யார் என்று கூறுமாறு கேட்டார்.
மாற்று உருவத்தில் வந்த நாராயணன் நான் பல வருட சிற்பக் கலையில் அனுபவம் கொண்ட சாதாரண சிற்பியாவேன் என்று கூறினார். ஆனால், தேவி பார்வதிக்கு சிற்பியின் கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லை.
ஏனெனில், சிவபெருமானின் சிலையை செய்வதில் பல்வேறு விதமான இன்னல்கள் உண்டாகியது. ஆனால், இவரோ எவ்விதமான சிரமங்களுக்கும் ஆளாகாமல் சிலையை நிறைவு செய்தார் எனில் இவர் சாதாரணமான சிற்பி இல்லை என்பதை உணர்ந்தார்.
மேலும், தேவி பார்வதி தாங்கள் யார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் யார் என்று கூறுமாறு பணிந்து நின்றார். இனி எவ்விதம் உரைத்தாலும் பயனில்லை என உணர்ந்த நாராயணன் தன்னுடைய மாற்று உருவத்தை விடுத்து உண்மையான நாராயணனின் வடிவத்தை தேவி லட்சுமியுடன் இணைந்து காட்சியளித்தார்.
பார்வதி தேவியும், நாரதரும் அக்காட்சியை கண்டு மகிழ்ந்தனர். இருப்பினும் தேவி பார்வதி நாராயணனிடம் ஒரு உபயம் வேண்டும் என கூறி நின்றார். தன்னுடைய சகோதரியின் கோரிக்கையை நிறைவேற்றுவது ஒரு தமையனின் கடமையாகும் எனக் கூறினார் நாராயணன்.
பார்வதி தேவி இனி மேற்கொண்டு தாங்கள் எனக்கு எவ்விதமான உதவியையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். ஏனெனில், இனி வரும் செயல்கள் யாவும் நானே செய்து முடித்தல் என்பதே என் விருப்பமாகும். இனி தாங்கள் மேற்கொண்டு எவ்விதமான உதவியையும் செய்ய வேண்டாம் என்று பணிந்து நின்றார்.
தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி நாராயணனும் அவ்விதமே அருள் பாவித்து மறைந்தார். இவ்விடத்தில் நிகழ்ந்தவை யாவையும் தன் ஞான பார்வையால் உணர்ந்த எம்பெருமானான சிவபெருமான் தோல்வி அடைந்தாலும் நீரே வெற்றி கொண்டாய் பார்வதி தேவி எனக் கூறினார்.