நம்முடைய வீட்டிற்கு தலைவாசல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல், ஜன்னல்களும் முக்கியத்துவம் வாய்ந்ததே. தலைவாசல் ஒரு வீட்டிற்கு உயிர் என்றால் அந்த உயிருக்கு மூச்சுக்காற்றாக இருப்பது ஜன்னல்களே.
வடக்கு ஜன்னல் :
வடக்கு ஜன்னல் என்பது நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் வரக்கூடியது. இந்த வடக்கு ஜன்னல் வீட்டின் ஆண்களின் வருமானத்தை தீர்மானிப்பது. எனவே வடக்கு ஜன்னலை பகல்பொழுது முழுவதும் திறந்து வைப்பதே நல்லது.
ஜன்னல் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பதும், ஜன்னல்கள் இல்லாத அமைப்பில் குடியிருப்பதும் தவறு. இதனால் ஆண்களின் வருமானம் பாதிக்கப்படும். பல இடங்களில் பெண்களின் வருமானம் அதிகமாகி ஆண்கள் வேலைக்கே போக முடியாத சூழ்நிலையில் தள்ளப்படுவதும் உண்டு.
கிழக்கு ஜன்னல் :
கிழக்கு ஜன்னல் நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிழக்கு சுவற்றில் வரக்கூடியது. இந்த கிழக்கு ஜன்னலே வீட்டில் உள்ளவர்களின் அனைவரின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது.
அதுமட்டுமல்லாது பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கவல்லது. இந்த கிழக்கு ஜன்னலே பெண்களின் வருமானத்தை தீர்மானிப்பது. கிழக்கு பகுதியில் ஜன்னல் இல்லாமல் இருப்பதும், ஜன்னல்கள் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பதும் இரண்டுமே தவறு.
அதனால் பல வகை கெட்ட பலன் அந்த வீட்டில் உள்ளவர்கள் மீதே அமையும். அதில் ஆண், பெண் இருவருக்குமே நிரந்தர வேலையில்லாத நிலைமை ஏற்படக்கூடும். திருமணத்தடை ஏற்படும். கண் பார்வை மற்றும் காது கேளாத நிலை ஏற்படக்கூடும். அதிகப்படியான கற்பனைக்கு ஆளாகி மனநலத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு, பெண்களுக்கு தைராய்டு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
வடக்கு, கிழக்கு இரண்டு பகுதி ஜன்னல்களுமே மிக முக்கியமானது. கொசு, பூச்சி, தூசி வராமல் இருக்க எப்பொழுதுமே மூடிவைத்தவர்கள் வீட்டிலும், ஜன்னல்கள் இல்லாதபோது என்ன கெட்ட பலன்கள் ஏற்படுமோ, அதே போல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பகல்பொழுதில் திறந்தே இருப்பது நல்லது. வடகிழக்கு பகுதியை முற்றிலும் மூடிய வீட்டையே கோமா நிலையில் உள்ள வீடுகள் என்று சொல்லப்படும்.
சமையலறை ஜன்னல் :
ஒரு வீட்டிற்கு தென் கிழக்கில் கிழக்கு பகுதியில் ஜன்னல் வருவதால் அந்த வீட்டின் சமையல் எப்பொழுதுமே சுகாதாரமானதாகவும், இயற்கையான சுவையானதாகவும் இருக்கும்.
நம்முடைய வீட்டிற்கு தெற்கு, மேற்கு பகுதிகளில் வரக்கூடிய ஜன்னல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. தென்மேற்கு படுக்கை அறையில் வரக்கூடிய ஜன்னல்கள் மட்டும் அந்த அறையில் தென்மேற்கு பகுதியில் வரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வடமேற்கு அறையிலும் தென்மேற்கு பகுதியில் ஜன்னல் வரா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு அறையிலும் ஜன்னல்கள் என்பது உச்சமான பகுதியில் மட்டுமே வரவேண்டும். அப்பொழுதுதான் அது நமக்கு பல நன்மைகளை செய்யும். நீசமான பகுதியில் ஜன்னல்கள் வருமானால், அது ஒரு தெருக்குத்துக்கு சமமான கெடுதலான பலனை கொடுக்கிறது.