No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனை சந்தித்த பேசும் கிளி..!!

Mar 04, 2023   Ramya   109    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை சந்தித்த பேசும் கிளி..!!

🌟 காந்தருவதத்தை, சீவகனின் முகத்தில் தெரிந்த அனைத்தையும் பார்க்க தவறவில்லை. இருந்தாலும் அவனுடைய கூற்றுக்களை இவள் மனம் ஏற்று கொள்ளவில்லை. வீட்டிற்குள்ளே இருந்து வேலைக்கான குரல் வர.. இருங்கள் வருகின்றேன்! என்று சீவகனிடம் கூறிவிட்டு வீட்டிற்குள்ளே சென்றாள்.

🌟 காந்தருவதத்தை சென்றதும் அவன் மனம் மீண்டும் குழப்பத்திற்கே சென்றது. இப்பொழுது என்ன செய்வது? என்று புரியாமல் தூரிகையை கையில் எடுத்து குணமாலையின் படத்தின் மீது தங்க நிறத்தினை பூசி கொண்டிருந்தான். சித்திரங்கள் வரைந்து கொண்டே சீவகனின் மனமானது பலவிதமான சிந்தனை குவியல்களுக்குள் அகப்பட்டது.

🌟 கண்ணில் இருந்து நீங்காத அந்த பாவையின் தோற்றமானது, அவனை எதுவும் செய்ய விடாமல், தனக்கு தானே பேசிக்கொள்ளும் அளவில் புத்தியையும் குழப்பி விட்டது.

🌟 சீவகன் குணமாலையை பற்றி நினைத்து கொண்டிருந்த பொழுது, அவனது மனசாட்சி அவனிடத்தில், ஒரு பெண்ணை அவளறிய ஆடவன் ஒருவன் தொட்டு விட்டால், அவளை யாரும் மணக்க மாட்டார்கள். தொட்டவன் யாரோ அவன் தான், அவளை மணக்க வேண்டும். யானையின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக எண்ணி அவளை நீ தொட்டுவிட்டாய். இனி அவளின் நிலை என்னவாக போகின்றதோ? என்று கூறியது.

🌟 அதற்கு சீவகன் அவனது மனசாட்சியிடத்தில், நான் ஏற்கனவே காந்தருவதத்தையை திருமணம் செய்து கொண்டேன். இனி மற்றொரு பெண்ணை மணப்பது என்றால் அது தவறாகி விடும் அல்லவா! அதுமட்டுமல்லாது துன்பத்தில் மாட்டி கொண்ட அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு செல்வதும் ஆண்மை அல்ல. அவளை காப்பாற்றுவது தான் ஆண்மை என்றும்,

🌟 ஒருவேளை நீ சொல்வது சரியாக இருந்தாலும், திருமணம் என்பது திருமகளின் எண்ணங்களில் தான் இருக்கின்றது. அவளுடைய விருப்பம் இல்லாமல் நான் அவளை மணக்கவும் இயலாது. இப்பொழுது நான் தான் இருதலை கொள்ளியாக மாட்டி கொண்டேன் என்றும், என்ன செய்வது? என்றே புலப்படவில்லை. ஆனால் மனதில் அவளோ நீங்காமல் நிறைந்திருக்கின்றாளே! என்றும் கூறினான்.

🌟 இங்கு நிகழ்ந்து கொண்டிருந்த அனைத்தையும் கண்ட கிளியோ, அவளின் நிலையை விட இவனின் நிலை மிகவும் விசித்திரமாக இருக்கிறதே என்று எண்ணியது. இப்படியே விட்டால் இவன் தன்னிலையை மறந்து விடுவானோ! என்று சிந்தித்து, பின் சீவகனிடம் சென்று அவளுக்கும் உன்னை மணம் புரிந்து கொள்ள விருப்பம் தான் என்று கூறிய வண்ணமாக அவன் முன் சென்றது.


🌟 யார் வீட்டு கிளி நீ? யார் கூறிய செய்தியை இங்கு வந்து கூறுகின்றாய்? என்றான் சீவகன்.

🌟 உன்னுடைய மனதில் தோன்றி இருக்கக்கூடிய குழப்பத்திற்கு காரணமானவளின் வீட்டிலிருந்து வந்து உமக்கு வேண்டிய நல்ல செய்தியை தான் நான் கூறியிருக்கின்றேன். இத்தனை நாட்களாக எனக்கு இந்த சிறகுகள் எதற்கு பயன்பட்டதோ... இல்லையோ... உமக்கு நற்செய்தியை உரைப்பதற்காக இன்று பயன்படுகிறது என்று கூறியது பேசும் கிளி.

🌟 நீண்ட நேரங்களாக சீவகனின் மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறந்தது. அவளுடைய மனதின் எண்ணங்களை புரிந்து கொண்ட சீவகனும் அவளை மணப்பதற்கான வாக்குறுதியை கூறினான்.

🌟 ராவணனின் பிடியில் அகப்பட்டிருந்த சீதையின் துன்பத்தை அனுமன் கொண்டு சென்ற ராமனின் கணையாழி எவ்விதம் போக்கியதோ, அதைப்போலவே அவளிடம் என்னுடைய கணையாழியை கொடு. அதுமட்டுமல்லாது இந்த ஓலையும் அவளிடம் சேர்த்துவிடு என்று கிளியின் காலில் கட்டினான்.

🌟 உன் நண்பர்களுக்கு நீ தான் தோழன்! அவளுக்கும் நீ தான் உற்ற தோழன்! உன் தோளில் அவள் துயில வேண்டும்! மேற்கொண்டும் நாட்களை கடத்தாதே.. என்று கூறிவிட்டு ஆகாயத்தின் வழியே பறந்து சென்றது பேசும் கிளி.

🌟 குணமாலையோ, பேசும் கிளி பறந்து சென்றது முதல் வானத்து வீதியையே பார்த்து காத்து கொண்டிருந்தாள். சென்ற கிளி கொண்டு வரும் செய்தி என்னவாக இருக்குமோ? என கவலையுடன் காத்து கொண்டிருந்தாள். வானில் பச்சையாக எது தெரிந்தாலும் அது கிளி என எண்ணி வானத்தை பார்த்த வண்ணமாக இருந்தாள். அருகில் யாரேனும் பச்சை என்ற பெயரை சொல்வதை கேட்டாலே, அவளின் பசியும் கூட பஞ்சு போல் பறந்து சென்றது.

🌟 விண்ணில் பறந்து தனக்கான செய்தியை கொண்டு வந்த கிளியை கண்டதும் குணமாலை அடைந்த மகிழ்ச்சி எல்லை இல்லாத அளவில் இருந்தது. அது மட்டுமல்லாமல் கிளியின் காலில் இருந்த கணையாழியை கண்டதும் சீவகனின் விருப்பம் என்னவென்றும் புரிந்து கொண்டாள்.

🌟 பின்பு கிளிக்கு தேவையான உணவினை கொடுத்து உறங்கு என்று கூறினாள். கிளி அவளுடைய அன்பையும், தனக்கு பிடித்த உணவையும் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தது. இதே போல தினமும் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் எண்ணியது.


Share this valuable content with your friends