இந்த இயற்கை பஞ்சபூதங்களால் ஆனது. இந்த பஞ்சபூதத்தை நாம் கட்டக்கூடிய வீட்டில் முறையாக கையாண்டால் பல எண்ணிலடங்கா நன்மைகள் வந்து சேரும். ஒருவேளை தவறாக அதை கையாண்டால் அதன் பிரதிபலிப்பு அந்த வீட்டில் வசிப்பவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் உடலின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.
நீர் :
நீரின்றி அமையாது உலகு என்போம். அந்த வகையில் நீருக்கு உண்டான இடம் வடகிழக்கு பகுதியாகும். இந்த இடம் நீருக்கு உண்டான தன்மையுடன் செயல்படுவதால் நீர் மூலை, ஜலம் மூலை, கன்னிமூலை, ஈசான்ய மூலை, சனிமூலை என பல பெயர்களில் இந்த இடத்தை குறிப்பிடுவார்கள். கடவுளுக்கு ஒப்பான இடமாகவும், மிகவும் சுத்தமான இடமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் இந்த இடத்தை ஈசான்ய மூலை என்றே நமது முன்னோர்கள் கூறி வந்துள்ளார்கள். நீர் எப்போதுமே தாழ்வான பகுதிக்கு நகரும் தன்மையுடையது. அதனால் தான் ஈசான்யத்தில் குழிதோண்டி அதில் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்கிறோம். இந்த பகுதியில் நீரை தேக்கி வைக்கும்போது மட்டுமே கெடுதல் எதுவும் ஏற்படுவதில்லை.
இந்த ஈசான்ய பகுதியை தவிர்த்து தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு ஆகிய பகுதிகளில் நீரை பூமிக்குகீழ் தேக்கி வைக்கும்படியான தொட்டியோ, குழிகளோ அமைக்கும்போது அந்த வீட்டில் வசிப்பவரின் வாழ்வில், பொருளாதாரத்தில், உடல் அமைப்பில் பல பல கெடுதலான மாற்றங்களும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
தென்கிழக்கு பகுதியில் நீரை பூமிக்குகீழ் தேக்கி வைக்கும்போது ஏற்படும் விளைவுகள் :
அந்த வீட்டில் வசிப்பவரின் இரத்த நாளங்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடலின் வெப்பமண்டலத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பெண்கள் அதிகமாக உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். திருமணத்தடை, திருட்டு, தீ விபத்து, சேமிப்பு குறைந்து கொண்டே வருவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
தென்மேற்கு பகுதியில் பூமிக்குகீழ் நீரை தேக்கி வைக்கும்போது ஏற்படும் விளைவுகள் :
அந்த வீட்டில் வசிப்பவர்களின் சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல், கணையம், கர்ப்பப்பை, முதுகு தண்டுவடம், இடுப்பு போன்ற பகுதியில் பாதிப்பு ஏற்படக்கூடும். உற்பத்தி, வருமானம், சேமிப்பு, பொருளாதாரம், கடன் மேலும் அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
வடமேற்கு பகுதியில் பூமிக்குகீழ் நீரை தேக்கி வைக்கும்போது ஏற்படும் விளைவுகள் :
அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் உடலில் மூச்சுப்பகுதிகளில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும். இருதயம், நுரையீரல், மனநலம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலை மற்றும் தொழிலில் நிரந்தரமற்ற நிலை ஏற்படுவது, ஆண்கள் நாணயம் இழக்க நேரிடும்.