சந்திரன் :
சந்திரன், சூரியனிடமிருந்து கிடைக்கும் ஒளியை பிரதிபலிக்கக்கூடியவர். குளிர்ச்சியானவர். மனதின் அதிபதியான சந்திரன், ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் தொடர்பு கொள்ளும்போதும், பாதிக்கப்படும் போதும், நீர் சம்பந்தமான நோய்களும், சுபர் பார்வையின்றி முழுவதுமாக பலம் இழக்கும் தருவாயில் காச நோயையும் அளிக்கவல்லவர். சந்திரன், இரத்தத்திற்கு காரகர் ஆவார்.
உயிர்களின் வளர்ச்சிக்கு சந்திரனின் குளுமை என்பது மிகவும் இன்றியமையாததாகும். பகலில் கிடைக்கும் சூரிய ஒளியினை பெற்று அதனை பாதுகாத்து தன்னகத்தே கொண்டே இரவில் கிடைக்கும் சந்திர ஒளியில் வளர்ச்சியடைகின்றன. எனவே சந்திரனுக்கும், நமது உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை அறிய வேண்டும்.
ஜலதோஷம், வாதம், ரத்தம் சம்பந்தமான நோய், சீதளம், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அதிகமான தூக்கம், சளி, குளிர் காய்ச்சல், இரத்தத்தில் ஏற்படும் வியாதிகள், மனநோய், பெண்கள் தொடர்பான பாலியல் நோய்கள், குளிர் இருமல், கபம், ஆஸ்துமா, சோம்பல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுதல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், வலிப்பு நோய், டைஃபாய்டு, சைனஸ், கண் சம்பந்தமான நோய்கள், வயிற்று வலி, மன நலம் பாதிக்கப்படுதல் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
செவ்வாய் :
செவ்வாய் நெருப்பு கிரகமாகும். செவ்வாய் எலும்பில் உள்ள மஜ்ஜைகளுக்கு காரகர் ஆவார். இரத்தம் என்பது சந்திரனின் ஆதிபத்தியம் என்றாலும் அதனைக் கட்டுப்படுத்தும் திறனை உடையவர் செவ்வாய் ஆவார். இதனாலேயே செவ்வாய் இரத்தக் காரகன் என்றும், குருதியோன் என்றும் அழைக்கப்படுகிறார். செவ்வாய் உடலில் உள்ள சக்திக்கும், பலத்திற்கும் காரணமானவர். பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை கொண்டுள்ளார்.
இவர் பலம் இழந்தால், ரத்தக்காரன் என்பதால் ரத்தம் சம்பந்தமான நோய்கள், ரத்தப்புற்று நோய், இரத்த அழுத்தம், கண் எரிச்சல், தீக்காயம், விஷம் சம்பந்தப்பட்ட நோய், அளவுக்கு அதிகமாக தாகம் உண்டாகுதல், ரத்தரோகம், கோபம், பித்தம், குஷ்டம், தலைவலி, விபத்துக்கள், வெட்டுக்காயங்கள், விந்து இழப்பு, நாய்க்கடி, இதய நோய், மலச்சிக்கல், இரத்தசோகை, பித்த நீர், வயிற்று வலி, அல்சர், கர்ப்பக் கோளாறுகள், ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் ஏற்படலாம்.