ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நினைவில் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், நம் தேசத்தின் விடிவெள்ளி என்று சொன்னால் அது மிகையாகாது.
1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தினநாள் ஜனவரி 26. இது 1950 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று நம் நாட்டின் 72வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர நாளான இன்று, சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நினைவு கூறுவோம்...!
மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.
நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே! என தீர்மானித்து ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.
பாலகங்காதர திலகர் இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் ஒருவர். சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என முழங்கியவர். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை என கருதப்படுபவர்.
சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்.
சுப்பிரமணிய பாரதி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.
தேசியக் கொடியின் மூவர்ணங்கள்
காவி - தைரியத்தையும், தியாகத்தையும் குறிக்கும்
வெள்ளை - அமைதி, உண்மை, தூய்மை
பச்சை - செம்மை, நம்பிக்கை, வீரத்தைக் குறிக்கின்றன.
அசோகச் சக்கரம் - நீதியைக் குறிக்கும்.
நாம் துயரின்றி வாழ சிலர்
இன்பத்தை துறந்தார்கள் !
அவர்கள் இன்பத்தை துறந்ததால்
இன்று நாம் துயரின்றி வாழ்கிறோம் !
அவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை
அன்போடும், பண்போடும், புகழோடும்
போற்றுவோம்!