தமிழ் மாதங்களில் எந்த மாதத்திற்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்திற்கு உண்டு. ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாகும்.
ஆடிப்பெருக்கு :
🌟 பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள்.
🌟 தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நாக சதுர்த்தி விரதம் :
🌟 நாக சதுர்த்தி விரதம் என்பது ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குவதாகும். மேலும், தக்ஷிணாயன புண்ணியகாலம் (ஆடி முதல் - மார்கழி) வரை இறை வழிபாட்டிற்கு உகந்த காலம்.
🌟 பெரும்பாலும் கோலாகலக் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, விரதங்கள், வழிபாடுகள் என மக்கள் தங்கள் மனங்களில் இறையுணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் மாதங்களாகும்.
🌟 நாக சதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும்.
ஆண்டாளின் ஆடிப்பூரம் :
🌟 ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். பொதுவாகப் பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி இருக்கும். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவார்.