🙏 சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
🙏 ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில், நிலத்தில் அறுவடையான புது நெல்லைக் குத்தி, புடைத்து, அதை அவித்து வடித்து அன்னம் சமைப்பார்கள். இந்த அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னத்தாலும், காய்கனிகளாலும் அலங்காரம் செய்வார்கள்.
🙏 பின்னர், அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இந்த அன்னத்தைப் புசிப்பவர்கள் சகலவித பாக்கியங்களையும் பெறுவார்கள்.
🙏 பக்தர்கள் உண்டது போக, மீதமிருக்கும் அன்னம் அந்த ஊரில் இருக்கும் குளம், ஏரிகளில் கரைத்து விடப்படும்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் :
🙏 ஐப்பசி மாத பௌர்ணமி தொடங்கியதும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை அரிசி அதாவது 1000 கிலோ சாதம் வடித்து அன்னாபிஷேகம் நடைபெறும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் :
🙏 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், அடி அண்ணாமலை ஸ்ரீஆதிஅருணாசலேஸ்வரர் கோவில் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா விமர்சையாக நடைபெறும்.
தஞ்சை பெருவுடையார் கோவில் :
🙏 ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
வைத்தியநாத சுவாமி :
🙏 அரியலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் :
🙏 திருவானைக்காவல் குபேர லிங்கம் பஞ்சபூத திருத்தலங்களில், நீர் ஸ்தலமான திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் :
🙏 காரைக்கால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம், காரைக்கால் கைலாசநாதர் ஆலயம், கோவில்பத்து பார்வதீஸ்வரர் ஆலயம், திருவேட்டைக்குடி திருமேனியழகர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும்.