நாம் வாழும் வீடு சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி வாஸ்து குறைபாட்டுடன் இருந்தால், அதை சரிசெய்து மாற்றியமைத்து வெற்றி பெறலாம். சொந்த வீடாக இருந்தால், வீட்டின் தவறான பாகத்தை இடித்து புதிதாக கட்டி சரிசெய்து விடமுடியும்.
வாடகை வீடாக இருந்தால் சரிசெய்வது எப்படி? வாஸ்து கோளாறோ, தெருக்குத்து தவறோ இருந்தால், அத்தகைய வீடுகளில் வசிப்பவர்கள் புதிய வீட்டிற்கு மாறும் வரையிலான இடைபட்ட காலக்கட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் ஆண்டாள் வாஸ்து நிபுணர் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் விளக்கங்களை பார்ப்போம்.
வாஸ்து குறைபாடுகளுக்கு பரிகாரங்கள் என்று எதுவும் கிடையாது. நாஸதே வித்யதே பவோ என்று பகவத் கீதையில் ஒரு ஸ்லோகம் உண்டு. இல்லாததை இருப்பதுபோல் காட்ட முடியாது என்பதே இதன் பொருளாகும்.
நல்ல வாஸ்து அமைப்பு, தவறான அமைப்பு இரண்டுமே இங்குதான் இருக்கின்றன.
பிரபஞ்சம் நாம் எதை தீவிரமாக நினைக்கின்றோமோ அதை நமக்கு தரும். படைக்கப்பட்டவை யாவும் படைத்தவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தே நடக்கும்.
நாமிருக்கும் வீட்டில் ஏதோ ஒரு மூலையிலோ, பிரம்மஸ்தலத்திலோ, ஜன்னல் வைத்ததிலோ, தெருக்குத்திலோ தவறு இருக்கிறது என்றால் அதை எப்படி சரிசெய்ய வேண்டும்?
தானம், நிதானம், சமாதானம் என்ற மூன்று மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.
தானம் :
நம்மால் முடிந்தளவு நம் சக்திக்கு உட்பட்டு தானம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்குமளவு என்னிடம் பணமில்லை என்றே நாம் பெரும்பாலான நேரங்களில் நினைக்கிறோம். யாசகம் பெற்று வாழ்பவர்கூட தெருவோரமாக உட்கார்ந்து சாப்பிடும்போது தன்னிடம் வரும் நாய்க்கு சிறிதளவு உணவை அளிக்கிறார். அதனால் நம்மால் முடிந்தளவு தானம் கொடுத்தால்கூட போதும். அதனுடைய பலன் மிகுதியாக இருக்கும்.
நிதானம் :
சென்னையிலிருந்து, திருச்செந்தூருக்கு போகவேண்டுமென்றால் உடனே போய்விட முடியாது. ஒவ்வொரு அடியாகத்தான் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதனால் நமக்கு வேண்டியது நிதானம். பொறுமையும், சகிப்புத்தன்மையும் உள்ளவர்களை காலம் ஒருநாளும் கைவிட்டதில்லை.
சமாதானம் :
நம் மனதிற்குள் இருந்தால்தான் நம்மால் மற்றவர்களுக்கு அதை தர முடியும். அந்த சமாதானம் எங்கிருந்து வரும்? போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம் நம் மனதில் வன்மத்தை விதைக்கும். ஆனால், அதை வேரோடு களைந்தெறிந்துவிட்டு தீமை செய்தவர்களையும் மனதார வாழ்த்துங்கள். உங்களுக்குப் பெருவாழ்வு நிச்சயம் கிடைக்கும்.