🌟 மாசி என்பது மகத்தான மாதம். வேதம் கற்றுக் கொள்ளுதல், கலைகளைக் கற்றறிதல், உபநயனம் முதலான விஷயங்களுக்கான அற்புதமான மாதம் மாசி மாதம். இந்த மாசி மாதத்தில் நாம் எது செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் உண்டு என்பது உறுதி. மாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் உள்ளன என்பதை பற்றி காண்போம்.
🌟 இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம் போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மாசி - 03 ஜயா ஏகாதசி (15.02.2019)
🌟 மாசி மாதத்தில் வரும் வளர்பிறை (சுக்லபட்சம்) ஏகாதசி ஜயா ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி தினத்தன்று இந்திரனின் சாபத்தின் காரணமாக பேய்களாக திரிந்த புஷ்பவந்தி, மால்யவன் ஆகிய கந்தவர்கள் தங்களையும் அறியாமல் இரவு விழிந்திருந்து இறைவனை வழிபட்டு மீண்டும் கந்தவர்களாயினர். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுவதற்கும் எதிரிகளை முறியடிப்பதற்கும் இந்த ஏகாதசி விரதம் துணை செய்யும்.
ஆகையால் இந்த ஏகாதசி விரதத்தினை அனைவரும் பின்பற்றி இறையருள் மூலம் நற்கதியினைப் பெறலாம்.
மாசி - 07 மாசிப்பௌர்ணமி (19.02.2019)
🌟 மாசிப்பௌர்ணமி அன்றுதான் அன்னை உமையவள் காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவத்தில் தோன்றினாள். சிவபக்தனான தட்சன் சங்கினைத் தொட்டவுடன் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள். எனவே மாசிப்பௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வின் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.
🌟 வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசிப்பௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார். அதனால் மாசிப்பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. மாசிப்பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.
மாசி - 07 மாசி மகம் (19.02.2019)
🌟 இவ்விழா மாசிமாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது. அன்று தானம், தவம் முதலியவற்றோடு புனித நீர்நிலைகளில் நீராடுவதும் பெரும் புண்ணியங்களைத் தரவல்லது. கோவில்களில் வழிபாடு செய்து அன்னதானம் முதலியனவும் செய்ய வேண்டும். இந்நாளில் செய்யும் வழிபாடும், தரிசனமும் மிகவும் உயர்ந்த பயனைத் தரவல்லதாகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
மாசி - 10 மாசி சங்கடஹர சதுர்த்தி (22.02.2019)
🌟 மாசியில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப்பெருமானை வழிபட எல்லா தோஷங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம். சங்கடஹர விரதத்தினை தொடங்குபவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ ஆரம்பித்து கடைப்பிடித்து விநாயகப்பெருமானின் திருவருளைப் பெறலாம்.
🌟 மாசி என்பது மகத்தான மாதம். வேதம் கற்றுக் கொள்ளுதல், கலைகளைக் கற்றறிதல், உபநயனம் முதலான விஷயங்களுக்கான அற்புதமான மாதம் மாசி மாதம். இந்த மாசி மாதத்தில் நாம் எது செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் உண்டு என்பது உறுதி. மாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் உள்ளன என்பதை பற்றி காண்போம்.
மாசி - 18 ஷட்திலா ஏகாதசி (02.03.2019)
🌟 மாசிமாதத்தில் வரும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) ஏகாதசி ஷட்திலா ஏகாதசி ஆகும். ஷட் என்றால் ஆறு, திலா என்றால் எள் என்பது பொருளாகும். இத்தினத்தில் எள்ளினை உண்பது, தானமளிப்பது, ஹோமத்தில் பயன்படுத்துவது என ஆறு விதங்களில் எள்ளினை உபயோகிக்க வேண்டும். இந்த ஏகாதசி விரத்தினைப் பின்பற்றினால் பசித்துயரம் நீங்கும். உணவு பஞ்சம் ஏற்படாது. அன்னதானத்தின் சிறப்பினை இந்த ஏகாதசி உணர்த்துகிறது. பசுவைக் கொன்ற பாவம், பிறர் பொருட்களை திருடிய பாவம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற பாவங்களையும் ஷட்திலா ஏகாதசி விரதத்தினைப் பின்பற்றி இறைவழிபாட்டினை மேற்கொண்டு நிவாரணம் பெறலாம்.
மாசி - 20 சிவராத்திரி (04.03.2019)
🌟 சிவராத்திரி இறைவனான சிவபொருளை நினைத்து ஆராதனை செய்து வழிபாடு நடத்த மிக உயர்ந்த நாளாகும். இவ்வழிபாடு மாசிமாதத்தில் அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசியில் மேற்கொள்ளப்படுகிறது.
🌟 சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.
🌟 இவ்விரத முறையினை மேற்கொள்வதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி பிறவாமை என்கிற மோட்சம் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரி நாளன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
மாசி - 27 கலைமகள் வழிபாடு (11.03.2019)
🌟 மாசிமாத வளர்பிறை (சுக்லபட்சம்) பஞ்சமி அன்று மணமுள்ள மலர்களால் கலைவாணியை அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ள கல்வியில் சிறந்து விளங்கலாம்.
மாசி - 30 காரடையான் நோன்பு (14.03.2019)
🌟 வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.
🌟 கார்காலத்தில் விளைந்த நெல்லையும், காராமணியையும் கொண்டு உணவினைத் தயார் செய்து விரதமிருந்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டதால் இது காரடையான் நோன்பு என்றழைக்கப்படுகிறது.
🌟 திருமணமான பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், கன்னிப் பெண்கள் நல்ல திருமணப்பேற்றினையும் வேண்டி இவ்விரத முறையை பின்பற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
🌟 இந்நோன்பு மாசி கடைநாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.
மகாவிஷ்ணு வழிபாடு
🌟 மாசிமாதம் மகாவிஷ்ணுவிற்கான மாதம் ஆகும். எனவே இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து வழிபட வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.