கந்தனின் சிறப்பான விரத நாட்கள் சுக்கிர வார விரதம், கார்த்திகை விரதம் மற்றும் கந்தசஷ்டி விரதமாகும். இந்த மூன்று விரதங்களில் கந்தசஷ்டி விரதமே மிகச்சிறந்த விரதமாகும்.
🌟 திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த பெருமையை கொண்டாடும் விழாவையே கந்தசஷ்டி என்று சொல்கிறோம். சஷ்டி என்பதற்கு ஆறு என்று பொருள்.
🌟 கந்தசஷ்டி கவசத்தின் காலம் ஆறு நாட்களாகும். அதாவது ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்தசஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களையும் விரத நாட்களாக கருதுகின்றனர்.
🌟 இவ்விரதம் இந்த வருடம் இன்று (08.11.2018) வியாழக்கிழமை ஆரம்பமாகி ஆறாவது தினமான (13.11.2018) செவ்வாய்க்கிழமை அன்று சூரசம்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.
கந்தசஷ்டி உருவான புராண கதை :
🌟 மும்மூர்த்திகளுள் படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தட்சன், சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று, சிவபெருமானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.
🌟 பிரம்மாவின் இன்னொரு மகனான காசிபனும் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான்.
🌟 இதனால் காசிபனுக்கும், மாயைக்கும் சூரபத்மன்(தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான்), சிங்கன், தாரகன் என்ற மூன்று மகன்களும், அஜமுகி என்ற பெண்ணும் பிறந்தார்கள். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவத்துடன் இருந்தார்கள்.
🌟 காசிபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசையை நோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். தன் தந்தை கூறியபடியே இவர்களும் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
🌟 இவர்களுள் சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும், இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவபெருமானிடம் கேட்டான்.
🌟 பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவபெருமான், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.
🌟 பெண்ணின்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும், அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் ஆசிப்பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் கொடுமைப்படுத்தி சிறையிலடைத்தனர். இதனால் இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.