நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள், பட்டாசுகள், புத்தாடை என்ற ஆசையை ஏற்படுத்தும் இந்த தீபாவளியின் வரலாற்றைக் காண்போம்.
நரகாசுரன் என்ற அரக்கன் மரணம் அடையும் நேரத்தில் இந்தத் தினத்தை எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவைக் கேட்டுக் கொண்டான். அவனது ஆசையின் படி நாம் தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிவருகிறோம்.
தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :
🌟 தீபாவளி தினத்தன்று தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். இப்படி செய்தால் வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும் கிடைக்கும்.
🌟 தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌟 தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
🌟 தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும். மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
🌟 வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்கவேண்டும்.
🌟 புத்தாடைகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடம், வீட்டுப் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.
🌟 தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும்.
🌟 தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம்.
🌟 பட்டாசு, புத்தாடை, இனிப்பு கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும், குதூகலமும் இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் வழிந்தோடும்.