🎉 தீபாவளி என்பது தீப ஒளியின் வெளிச்சமானது வீடுகளில் பரவுவதற்கு ஏற்ற காலமாகும். இருண்டு கிடக்கும் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த தீப ஒளி திருநாள் வருகிறது.
🎉 ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் (அகங்காரம், பொறாமை, தலைக்கணம்...) இருக்கும். அந்த தீய எண்ணங்கள் இருட்டு போல மனதில் இருக்கும். தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த இது சிறந்த நாளாக அமைகிறது.
🎉 பொதுவாக தீபாவளியை ஐப்பசி மாதம் தான் கொண்டாடுகிறோம். ஏன் ஐப்பசியில் கொண்டாடுகிறோம்? அதைப்பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.
🎉 இரண்டு பேருக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு சொல்பவர் தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு.
🎉 தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல், எவன் இருக்கிறானோ அவனே நீதிமான்.
🎉 அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். ஆகவே, தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது.
🎉 பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனவுறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் கொண்டாடுவதின் நோக்கம் ஆகும்.
தீபாவளியை எப்போது கொண்டாட வேண்டும்?
🎉 தமிழ் மாதமான ஐப்பசியில் (துலா மாதம்), தேய்பிறை (கிருஷ்ணபட்ச) சதுர்தசி திதியில் தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை நரக சதுர்தசி என்றும் அழைப்பார்கள். அமாவாசைக்கு முன்னால் வரும் திதியான சதுர்தசி திதி அன்று, விடியற்காலை நேரமான 4.30 முதல் 6 வரை தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நம் சாஸ்திரம் கூறுகிறது.
🎉 தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசைக்கு முன் தினம் நரக சதுர்தசி அன்று தீபாவளியை கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி ஐப்பசி அமாவாசை தினத்தன்றே வரும். கிரகோரியின் நாட்காட்டியின் படி அக்டோபர் மாதம் 17 லிருந்து நவம்பர் மாத 15ம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
எது சிறப்பு?
🎉 தீபாவளி அன்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுகளுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.
தீபாவளி திருநாளில் தீப ஒளியினை ஏற்றி ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடுவோம்.