No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனை தேடி பயணம் மேற்கொண்ட நந்தட்டன் ..!!

Mar 22, 2023   Ramya   200    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை தேடி பயணம் மேற்கொண்ட நந்தட்டன் ..!!

🌟 மன்னருடைய இறுதி முடிவை கேட்ட கனகமாலைக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதாவது, எப்படியோ கடினமாக இருக்கக்கூடிய சில விஷயங்கள் மிகவும் எளிதாக நிறைவு பெற்றது என்று மகிழ்ச்சி கொண்டாள். அவளுடைய பணிப்பெண்ணான அநங்க விலாசினி, ஏதோ ஒருவிதத்தில் நாம் புண்ணியம் செய்திருக்கிறோம் என்று எண்ணி சில நாட்களுக்கு பிறகு நிம்மதியானாள். பின் இளவரசியின் அருகில் சென்று வாழ்த்துக்கள் கூறினாள்.

🌟 இப்பொழுது ஓட வேண்டியது தானே ஏன் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றாய்? என்று கனகமாலை கேட்க, அதற்கு அநங்க விலாசினி, அனைத்தும் உறுதியாகிவிட்டது. இனி நான் ஓடி என்ன பலன் ஏற்பட போகின்றது? என்று கூற இருவரும் அந்த நிகழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தனர். அதேசமயம் கனகமாலை மைதானத்தின் நடுவில் இருந்த சீவகனையும் பார்த்தாள்.

🌟 இங்கு நந்தட்டன் சீவகன் இறந்ததை நம்பவில்லை. பயிற்சி எதுவும் இல்லாமல் வெறும் அதிகார பதவியில் மட்டுமே இருக்கக்கூடிய மதனனும், அவனுடைய ஏவலாளிகளும் என்னுடைய அண்ணனை கொன்றிருக்க முடியாது. இவர்கள் கூறியவை அனைத்தும் பொய்யே! இதை நிரூபிக்கும் வகையில் சீவகனை எங்கு இருந்தாலும் நான் அழைத்து வருவேன் என்ற நம்பிக்கையோடு சீவகனை தேடிய வண்ணமாக பல ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டான்.

🌟 பல இடங்களிலும் சீவகனை தேடினான். நாட்கள் யாவும் ஓட துவங்கின. ஆரம்பத்தில் இருந்த அவனுடைய நம்பிக்கையானது நாட்கள் ஓட ஓட குறைய துவங்கியது. ஏனென்றால், அவனிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும் வண்ணம் எந்தவொரு வாய்ப்புகளும், ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

🌟 பயணத்தின் காரணமாக அவன் உடலானது அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றம் கொண்டிருந்தது. இறுதியாக கட்டியங்காரன் கூறியதை போல அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சீவகனை கொன்றிருப்பார்களா? என்று நினைத்தான். பின் அவர்கள் கூறியதை ஏற்க முடியாமலும், இப்பொழுது என்ன செய்வது? என்று புரியாமலும் தன்னுடைய ஊரை நோக்கி பயணத்தை மேற்கொண்டான்.

🌟 ஒருவேளை சீவகன் உயிரோடு இருந்திருந்தால் காந்தருவதத்தைக்கோ அல்லது குணமாலைக்கோ அவனை பற்றி தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அவர்களிடத்தில் சென்றால் இதற்கான பதில் கிடைக்கும் என்று நினைத்து நேரடியாக காந்தருவதத்தையின் வீட்டிற்கே சென்றான்.


🌟 காந்தருவதத்தை, வீட்டிற்கு முன்பாக தலைவனை பிரிந்த தலைவி தனிமையில் இருக்கின்ற பொழுது அவனுடைய நினைவுகளை இனிமையான நினைவுகளாக மாற்றி பாடி கொண்டிருந்தாள். பாடலை கேட்டதும் நந்தட்டனுக்கு கோபமானது அதிகரிக்க தொடங்கியது.

🌟 வீட்டிற்குள் நுழைந்த நந்தட்டன் நிறுத்துங்கள் அண்ணி! என் அண்ணன் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்றே எனக்கு இன்னும் புலப்படவில்லை. நீங்கள் எந்தவிதமான கவலையும் இல்லாமல், பல நகைகளையும் அணிந்து மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களே! என்றான். மேலும், தலைவனை இழந்த தலைவிகள் பலரை நான் கண்டிருக்கின்றேன். சிலர் நெருப்பிலே குதிப்பார்கள். சிலரோ தன்னைத்தானே மாய்த்து கொள்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களிடத்திலிருந்து மாறுபட்டு அல்லவா காணப்படுகின்றீர்கள்.

🌟 காந்தருவதத்தை, எனக்கு எதற்காக அவர் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்வி எழ வேண்டும்? என்று புன்னகையோடு கூறினாள். காந்தருவதத்தையின் புன்னகை நந்தட்டனிடத்தில் மென்மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.

🌟 ஆமாம், உங்களுக்கு ஏன் அந்த எண்ணம் உருவாக போகின்றது? மகிழ்ச்சியாக இருக்கின்ற உங்களுக்கு அவரை பற்றிய கவலை எப்படி வர போகின்றது? மேலும் அவரை பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா உங்களுக்கு? என்றான் நந்தட்டன் கோபத்தோடு.

🌟 நந்தட்டன் காந்தருவதத்தையிடம் கோபமாக பேச, போதும் நிறுத்து நந்தட்டா! உம்முடைய பேச்சுக்களில் கடினம் அதிகமாகி கொண்டே போகின்றது. இங்கு யார் இன்ப களிப்புகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா? உன்னுடைய அண்ணன் இல்லாமல் எல்லோரும் இங்கு எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றோம்? என்பதை பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல் அவர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கின்றாரே! அவரை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? எனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும் என்பதை மறந்து விட்டாயோ! என்றாள் காந்தருவதத்தை.

🌟 அப்பொழுது தான் நந்தட்டனுக்கு தன்னுடைய அண்ணிக்கு மந்திர தந்திரங்கள் அனைத்தும் தெரியும் என்பது நினைவிற்கு வந்தது. தன்னுடைய அண்ணி இப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றார் என்றால், என்னுடைய அண்ணன் உயிரோடு இருக்கின்றார் என்று தானே அர்த்தம். மேலும் அவர் இன்னும் இறக்கவில்லை என்பதையும் தெளிவாக புரிந்து கொண்டான்.


🌟 பின் நந்தட்டன், காந்தருவதத்தையிடம் என்னை மன்னித்து விடுங்கள் அண்ணி! ஏதோ ஒரு கோபத்தில் அப்படி பேசி விட்டேன் என்றான். இப்பொழுது அண்ணன் எங்கே இருக்கின்றார் என்று உங்களால் கூற முடியுமா? அவர் நலமாக இருக்கின்றாரா? என்று கேட்டான்.

🌟 அதற்கு காந்தருவதத்தை, அவருக்கு என்ன? அவர் இப்பொழுதும் சுகபோகங்களுடன் நன்றாக தானே இருக்கின்றார். இந்த ஊரை விட்டு சென்ற ஆறு மாதங்களில் அவர் மூன்று திருமணங்களை செய்து கொண்டு, இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நீயும் அவரை இப்பொழுது பார்க்க விரும்புகின்றாயா? என்று கேட்டாள்.


Share this valuable content with your friends