புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமி வரை ஒன்பது தினங்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த நவராத்திரி வழிபாட்டின் மகிமைகளை பற்றி காண்போம்.
மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றிற்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே நவராத்திரி வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். நடுவில் உள்ள மூன்று நாட்கள் தன சக்தியின் தோற்றமான லட்சுமியை நினைத்து வழிபட வேண்டும். இறுதி மூன்று நாட்கள் கிரியா சக்தியான சரஸ்வதியை பூஜிக்க வேண்டும்.
🌟 காலையில் எழுந்து சுத்த பத்தமாக அம்பாளை வழிபட்டு, அம்மனுக்குரிய பாடல்களை பாடலாம் அல்லது கேட்கலாம். மாலை நேரத்தில் அம்பாள் கோவிலிற்கு சென்றுவிட்டு அதன்பிறகு உணவு உட்கொள்ளலாம்.
பூஜை பாடல்கள் :
🌟 துர்க்காஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை - ஸ்லோகங்களை படிக்கலாம் அல்லது கேசட்டில் ஒலிக்கவும் செய்யலாம்.
🌟 நவராத்திரி கொலுவில் கும்பம் வைப்பது மிகவும் முக்கியமானது. நறுமணம் மிக்க சந்தனம், பூக்கள் இவைகளோடு மாதுளை, வாழை, பலா முதலியவற்றை அம்பாளுக்குப் படைக்கலாம். கும்பத்தில் புனுகு, கோரோனை, பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ இவற்றுடன் பன்னீர் சேர்த்து கும்பம் வைத்து அதைப் பிரதான அம்மனாக வைத்து வழிபடலாம்.
பூஜை நேரம் :
தினமும் காலையிலும், மாலையிலும் கொலு பொம்மைக்கு பூஜை செய்ய வேண்டும்.
மாலையில் 5.30 முதல் 7.00 மணிக்குள் கூட்டு பிரார்த்தனை மற்றும் பூஜை செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.
🌟 விரதமிருப்பவர்கள் வரும் நவமி அன்று முழுமையாக விரதம் இருக்க வேண்டும். அன்று தான் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம். அன்றைய தினம், குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், நாம் பாராயணம் செய்யும் புத்தகங்களை வைத்து வழிபட வேண்டும்.
🌟 ஒன்பது நாளில், உங்களுக்கு வசதிப்படும் ஏதாவது ஒரு நாளில் ஒன்பது பெண்களை அழைத்து அவர்களுக்கு உணவு அல்லது இனிப்பு பண்டங்கள் கொடுத்து, மஞ்சள் குங்குமச்சிமிழ், பூ, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு போன்றவற்றை தர வேண்டும்.
🌟 அடுத்த நாள் விஜயதசமியன்று சுவையான பலகாரங்கள் செய்து அம்பாளுக்குப் படைத்து நிவேதனம் செய்து, குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்பாளை வழிபட வேண்டும். இவ்வாறு சிரத்தையுடன் அம்பாளுக்கு உபவாசம் இருந்து விஜயதசமி அன்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
🌟 இவ்வாறு முறையாக விரதமிருந்தால், வாழ்வில் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடும். இதுபோன்று ஒன்பது வருடங்கள் தொடர்ச்சியாக விரதமிருப்பவர்களுக்கு வாழ்வில் எந்தக் குறையும் இருக்காது.
🌟 நமக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கும் இது புண்ணியமாகும். கலைமகளும், மலைமகளும், திருமகளும் நமது வம்சத்திற்கு அருள்புரிவார்கள் என்பது நிச்சயம்.