ரக்ஷா பந்தனின் சிறப்பு :
ரக்ஷா பந்தன் என்பது ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பிணைப்பு என்றும், பாதுகாப்பு பந்தம் என்றும் பொருள். இப்பண்டிகையை ராக்கி என்றும் அழைப்பார்கள்.
பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் தீய காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
ராக்கி கட்டியவுடன் சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவார்கள். அண்ணன், தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழா ரக்ஷா பந்தன்.
ராக்கி வரலாறு :
ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டார்.
அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார்.
புராண கதை :
பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லட்சுமி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார். ஆவணி பௌர்ணமி நாள் திருவிழா கொண்டாட்டத்தின்போது கலைமகள் லட்சுமி, பாலியின் கையில் ராக்கி என்னும் புனிதக்கயிற்றைக் கட்டினார். அப்போது பாலி, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிற்றைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வு பாலியின் மனதைத் தொட்டதால் இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லட்சுமிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா பாலிவா என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஆவணி பௌர்ணமி தினத்தன்று சகோதரர்கள், சகோதரிகளை அழைத்து, ராக்கி கட்டும் ஒரு பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி போர்க்காலங்களில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு மஞ்சள் நிற ரக்ஷா கயிற்றினைக் கட்டி அனுப்பி வைத்த செயல்கள் பற்றியும் வரலாற்றில் காணப்படுகிறது.
இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.