ஒருவருடைய ஜெனன ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஏழரை சனி தொடங்குகிறது. ஒவ்வொரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் சந்திரனுக்கு 12,1,2-ல் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரை சனி என்று கூறப்படுகிறது. மாளிகையில் வசிக்கும் மன்னரைகூட மண்குடிசைக்கு தள்ளக்கூடிய வலிமை சனிக்கு உண்டு. சனி இறைவனையும் விட்டு வைப்பதில்லை என புராணங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட சனிஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட கீழ்க்கண்ட பரிகாரங்களை கடைப்பிடிக்க கஷ்டங்கள் விலகும்.
பரிகாரங்கள்:
குறிப்பாக யாரையும் சனியானே என்று திட்டாதீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செருப்புகளை அடிக்கடி மாற்றிவிடுங்கள். நம் வீட்டில் உள்ள முதியவர்களை திட்டவோ, ஏளனமாக பார்க்கவோ கூடாது. அவர்களுக்கு உதவ நீங்கள் முன் வர வேண்டும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள் கலந்த சாதம் வைத்த பின்பு தான் நீங்கள் உணவருந்த வேண்டும். தொழிலாளிகளின் மனதை காயப்படுத்தும் விதமாக நடந்துக் கொள்ளாதீர்கள், முடிந்தால் அவர்களுக்கோ, இல்லை அவர்களது குடும்பத்தினருக்கோ உதவலாம்.
திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடினால் ஏழரை சனி பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். அனுமனை வழிபடவும். அனுமன் துதிகளை கூறவும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் நல்லது. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள். வாராஹி, வராக மூர்த்தியையும் வழிபடலாம்.
சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள். கருப்பு நிறத்தை தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள். பரம ஏழைகள், மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு (கால் ஊனம்), முதியவர்களுக்கு பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.
வாசனை திரவியம் தவிர்க்கவும். வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும். நீல நிறத்திலான கல் பதித்த வெள்ளியிலான மோதிரம் அணிவது நல்லது. கருப்புகயிறு அணியலாம்.
குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். தோட்டம் போடுங்கள். அதனுடைய பலனை மற்றவர்களுக்கு பயன்படுமாறு செய்யுங்கள். நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
யாரேனும் லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சனை வராது என்றால் துணையாகவும் செல்லலாம். எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள். நீங்கள் குடியிருக்கும் வீட்டின் மேற்கு திசையில் பள்ளம், காலியிடம் இருக்கக்கூடாது.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து சிவன் கோவிலில் நவகிரக சன்னதியிலுள்ள சனிஸ்வர பகவானை அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபடவும்.
மேற்கூறிய அனைத்தையும் ஏழரை சனி உள்ள காலம் வரை கடைப்பிடித்தால் சனிஸ்வர பகவான் உங்கள் மீது கருணை மழை பொழிந்து காப்பார்.