No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் பகுதி - 2 : சுந்தரமூர்த்தி நாயனார்...!! பகுதி 2

Mar 09, 2020   Ananthi   524    சிவபுராணம் 

ஆரூரருக்கு இங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்பது புரியவில்லை. ஆயினும் அவையிலிருந்த பெரியோர்களின் தீர்ப்பிற்கு தலை வணங்கி அந்தணருக்கு அடிமையாகி இருப்பதுதான் தமது கடமை ஆகும் என்பதை உணர்ந்தார். அவையிலிருந்த பெரியவர்கள் முதியவரை நோக்கி ஐயனே...!! நீர் கொடுத்த மூல ஓலையில் நீர் வாழ்ந்து கொண்டிருப்பது வெண்ணை நல்லூர் என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்களே... ஆனால், நாங்கள் யாவரும் உங்களை இவ்விடத்தில் பார்த்ததே இல்லையே? இவ்வூரில் உங்களின் இருப்பிடம் எங்கே இருக்கின்றது? என்பதை எங்களுக்கு காட்டுவீராக... என்று கேட்டார்கள்.

முதியவர் கோலத்தில் இருந்த எம்பெருமான் அவையோர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதற்கென்ன இதோ என்னுடன் வாருங்கள்... நான் குடியிருக்கும் வீட்டை காட்டுகின்றேன் என்று கூறி அவர்கள் அனைவரையும் தாம் இருக்கும் இடமான அதாவது, அவ்வூரில் இருக்கின்ற திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலை நோக்கி புறப்பட்டு கொண்டிருந்தார். ஆரூரர் உட்பட அனைவரும் முதியவரை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

முதியவரும் ஒரு வழியாக கோவிலை அடைந்த பின்பு அக்கோவிலில் புகுந்த முதியவர் யாவரும் காணாத வண்ணத்தில் மாயமாக மறைந்தார். ஆருரரும் அவர் பின் வந்த அவையை சேர்ந்த பெரியவர்களும் நெடுநேரமாக அந்த கோவிலில் காத்துக்கொண்டிருந்தனர். கோவிலிற்குள் சென்றவர் வெளியே வரவில்லை என்று அனைவரும் உள்ளே சென்று அவரை தேடினார்கள். ஆனால் முதிய அந்தணர் அவ்விடத்தில் இல்லாததைக் கண்டு இனியும் காத்திருத்தல் ஆகாது என்று எண்ணி ஒருவர் பின் ஒருவராக அவர்களின் இல்லங்களை நோக்கி புறப்பட்டு கொண்டு இருந்தனர்.

ஆனால் ஆரூரர் மட்டும் திருத்தலத்தின் வாயிலிலே நின்றுகொண்டு பெரியவரின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தார். தன்னுடன் வந்த அனைவரும் சென்ற பின்பு இவ்விடத்தில் எவருமில்லை உள்ளே சென்ற முதியவர் இன்னும் திரும்பாதது ஏன்? அவருக்கு ஏதாவது ஆயிற்றா? என்றவாறு சிந்திக்கத் துவங்கினார்கள். ஆரூரர் மட்டும் தனியே முதிய அந்தணரைத்தேடி கோவிலுக்குள் நுழைந்தார். கோவிலில் பல இடங்களில் தேடியும் முதிய அந்தணர் காணாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். அவருடைய வழிகளிலிருந்து கண்ணீரானது மல்க துவங்கியது.

நிகழ்ந்த யாவற்றையும் எண்ணிப்பார்த்து நடைபெற்று கொண்டிருப்பதற்கான காரணத்தையும், அதற்கான காரணகர்த்தா யார்? என்பதையும் அவர் புரிந்து கொண்டார். இதுவரை நம்மிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருந்தது, நான் தினமும் வணங்கும் எம்பெருமானே என்பதை உணர்ந்து கொண்டார் ஆரூரர். தன்னை ஆட்கொள்ள இங்கு இவ்விதமான செயல்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை புரிந்து கொண்டு ஐயனே...!! தங்களை அறியாமல் ஏதேதோ பிதற்றி விட்டேனே...!! இந்த அடியேனை மன்னிப்பீரோ... என்று உள்ளத்தில் எம்பெருமானை எண்ணி விழிகளில் அவரைக் காணும் வண்ணம் கோவிலில் வலம் வந்து கொண்டிருந்தார். கோவிலுக்குள் பல இடங்களிலும் தேடியும் தேவர்களுக்கு தேவரான... மகாதேவரானா.. எம்பெருமானை காண முடியவில்லையே என்று மனதளவில் சோர்ந்து போனார் ஆரூரர்.

ஆரூரர் எம்பெருமானை காண முடியவில்லையே என்று மனதளவில் சோர்ந்து போன தருவாயில், ஒரு பிரகாசமான பேரொளியானது அவ்விடத்தில் தோன்றியது. அந்த ஒளியில் ஆனந்த கூத்தராக அருள்புரிபவரான எம்பெருமான் உமையவளுடன் விடையின்மீது காட்சியளித்தார்.

அக்கணத்தில் ஆலயத்தில் இருந்த மணிகள் மங்கள ஓசை எழுப்ப...

விண்ணுலகில் இருக்கும் தேவாதி தேவர்களும்...

மண்ணுலகில் காட்சிதரும் எம்பெருமானுக்கு மலர் மாரி பொழிந்தனர்...

தேவகணங்கள் இசை முழக்கம் செய்தனர்...


இக்காட்சியைக் கண்ட ஆரூரருக்கோ எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. தனது பிறவியின் நோக்கம் யாது? என்று அறிந்தோம் என்பதையும் புரிந்து கொண்ட ஆரூரர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து ஆசியு பெற்று கொண்டிருந்த தருணத்தில், எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். அதாவது, ஆறுகளை நோக்கி முற்பிறவியில் என்னுடைய பக்தர்களின் ஒருவராக சிறந்து விளங்கிய நீர் ஒரு சமயத்தில் மாதர் மீது ஈர்ப்பு கொண்டதன் விளைவாக இப்பிறவியை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. மீண்டும் ஒரு பிறவி உன்னை சூடாமல் இருக்கவே யாம் உன்னை ஆட்கொள்ள இவ்விடத்திற்கு வருகை தந்து இருந்தோம் என்று கூறினார்.

எம்பெருமானின் கூற்றுகளை கேட்டதும் மலரில் இருக்கும் தேனினை அளவுக்கதிகமாக உண்ட வண்டினை போல மட்டற்ற மகிழ்ச்சியான நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார் ஆரூரர். மேலும், எம்பெருமான் என்னிடம் நீ வாதம் புரியும்போது வன்மையாக பேசியதால் நான் உமக்கு "வன்றொண்டான்" என்ற திருநாமத்தை சூட்டுகிறோம். இன்று முதல் அனைவராலும் வன்றொண்டான் என்றும் அழைக்கப்படுவாய் என்று கூறினார். மேலும், எழில்மிகு மொழியான தமிழ் மொழியால் இயற்றப்பட்ட, அழகு நிறைந்த தமிழ்பாக்களால் எம்மை அர்ச்சனை செய்வாயாக... என்ற அன்பு கட்டளையும் விடுத்தார்.

என் உள்ளத்தில் முழுவதுமாக நிறைந்து இருக்கும் எம்பெருமானே...! தங்களின் திருவிளையாடல்களை புரிந்து கொள்ள முடியாமல் எம்முடன் வழக்கில் ஈடுபட்டு எம்மை வென்று ஆட்கொண்ட எம்பெருமானே...! அடியேன் செய்த சிறு பிழையையும் மன்னித்து பொறுத்தருள வேண்டும் என்று கூறினார். மேலும், உங்களின் கருணையை

என்னவென்று நான் பாடுவேன்?

எவ்விதத்தில் தொடங்குவேன்?

யாது செய்வேன்?

யாது புரிவேன்?


என்று உருகி எம்பெருமானிடம் தனது எண்ணத்தை விண்ணப்பித்து நின்று கொண்டிருந்தார்.

புன்னகை பூத்த முகத்துடன் காண்போரை வசீகரிக்கும் சர்வமும் தன்னுள் கொண்டிருக்கும் எம்பெருமான் ஆரூரரை நோக்கி யாம் உம்மை ஆட்கொண்டபோது எம்மை நீர் "பித்தா" என்று அழைத்தாய். ஆதலால் பித்தா என்று அடி எடுத்து எம்மைப் பாடுவாயாக என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஆரூரர் எம்பெருமானை மனதில் எண்ணி "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா" என்று அடியெடுத்து பிறவிப் பெருங்கடலில் மீண்டும் அகப்படாமல் தன்னை தடுத்து ஆட்கொண்ட எம்பிரானின் மீது திருப்பதிகம் பாடத் தொடங்கினார். வன்றெண்டான் பாடிய இசைத் தமிழில் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு திருவருள் புரிந்து அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார்.

எம்பெருமான் அருளிய திருவருளினால் மனம் மகிழ்ந்த ஆரூரர் மீண்டும் திருநாவலூர் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் மீது திருப்பதிகங்களைப் பாடினார். எம்பெருமான் ஆரூரரை தடுத்து பிறவி பெருங்கடலில் மீண்டும் ஆட்படாமல் ஆட்கொண்டதால் அவரையே திருமணம் செய்து கொண்டு மகிழ்வான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த சடங்கவியாருடைய திருமகளும் ஆரூரரின் நினைவாலேயே சில காலத்திற்கு பின் யாவருக்கும் எளிதில் கிட்டாத சிவலோக பதவியான பிறவா பெரும் வாழ்க்கையை அடைந்தார்.

திருநாவலூர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வழிபட்டு அவர் மீது திருப்பதிகங்களை பாடிய பின்பே பரமன் குடியிருக்கும் ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று அவர் மீது பாடல்களையும், திருப்பதிகங்களையும் பைந்தமிழால் பாட வேண்டும் என்று எண்ணினார். அவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த ஒரு நாளில் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு திருநாவலூர் அருகிலுள்ள துறையூருக்கு வந்திருந்தார். துறையூரில் இருக்கும் பிறை முடி நாதரை அழகிய பைந்தமிழர்களால் அவர் புகழைப் பாடி வழிபட்டார். அவர் பாடிய பாடல்களில் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு அருள்புரிந்தார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சிதம்பரத்தில் ஆடல் புரிந்து கொண்டு இருக்கின்ற தில்லை நகரை அடைந்து வழிபட எண்ணி பெண்ணை ஆற்றை கடந்தார். அந்த நேரத்தில் ஆதவனும் மறையும் தருவாயில் இருந்தமையால் பெண்ணை நதிக்கு அருகில் உள்ள திருவதிகை என்னும் தலத்தினை அடைந்தார் சுந்தரர். இத்திருத்தலம் நாவுக்கரசர் உளவார பணிகளால் எம்பெருமானுக்கு பல தொண்டுகள் புரிந்த புண்ணிய தலமாகும் என்பதை உணர்ந்தார்.

திருநாவுக்கரசர் உளவார பணிகளால் எம்பெருமானுக்கு பல தொண்டுகள் புரிந்த புண்ணிய தலமாகும் என்பதை உணர்ந்த சுந்தரர் இவ்விடத்தில் யான் கால் மிதிக்க அஞ்சுகிறேன் என்று மனதில் எண்ணினார். மேலும், திருத்தலத்தின் உள்ளே செல்லாமல் அருகிலிருந்த சித்தவடம் என்னும் இடத்திற்கு சென்று அவ்விடத்தில் தங்கினார். பயணம் மேற்கொண்ட களைப்பினால் திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளை மனதில் எண்ணிய வண்ணம் நித்திரை செய்து கொண்டிருந்தார்.

இவர் நித்திரை செய்து கொண்டிருந்த காலத்தில் திருவதிகை பெருமான் முதிய வேதியர் வடிவம் கொண்டு எவரும் அறியாமல் இருக்கும் வண்ணம் சுந்தரர் துயில் கொண்டிருக்கும் இடத்தினுள் எழுந்தருளினார். சுந்தரர் தலையின் மீது தன்னுடைய திருவடி படுமாறு வைத்துக்கொண்டு, தாமும் படுத்துக்கொண்டு இருப்பது போல் காட்சியளித்தார். சிறிது நேரத்தில் தமது தலையின் மீது யாருடைய பாதங்களோ இருக்கின்றது என்பதை உணர்ந்தார்.

பின் சுந்தரர் துயிலிலிருந்து விழித்தெழுந்து பார்த்தபொழுது தம்முடைய சிரசின் அருகில் இரு பாதங்கள் இருக்க கண்டார். உடனே தம்முடைய தலையை உயர்த்தி பார்க்க அவ்விடத்தில் எவரோ படுத்துக்கொண்டு இருப்பதை அறிந்து அவரை நோக்கி ஐயா...! உங்களுடைய பாதங்கள் என் தலை மீது படும்படியாக வைத்து படுத்துக் கொண்டு இருப்பது ஏனோ? என்று வினவினார்.

இவர் கேள்வி கேட்ட பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தது போல விழித்தெழுந்த அப்பெரியவர் முதுமையினால் ஏற்பட்ட சிறு பிழையை பொறுத்தருள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரரும் அவர் கூறியதில் இருக்கக்கூடிய உண்மை பொருளை உணர்ந்து அமைதி கொண்டு வேறு இடத்திற்கு சென்று படுத்து உறங்க முயன்றார். முதியவர் மீண்டும் திருவடிகளை வேண்டுமென்றே சுந்தரரின் சிரசின் மீது இருக்கும்படி படுத்துக் கொண்டிருந்தார்.

சுந்தரர், சிறிது நேரத்திற்கு பின்பு தூக்கத்தில் தன்னுடைய சிரசின் அருகில் இரு பாதங்கள் இருப்பதை உணர்ந்ததும் மீண்டும் கண்விழித்து பார்த்தார். அப்பொழுதும் அதே பெரியவர் மீண்டும் தனது அருகில் படுத்திருப்பதை கண்டார். மேலும், பெரியவர் எதை மனதில் கொண்டு இவ்விதமாக செய்து கொண்டிருக்கின்றார்? என்று மனதில் எண்ணிய வண்ணம் அவரை நோக்கி, தாங்கள் யார்? என்று வினவினார்.

முதியவர் கோலத்தில் இருந்த எம்பெருமானும் நான் யார்? என்று நீ இன்னும் அறியவில்லையா? என்று கூறிய வண்ணம் அவ்விடத்திலிருந்து மாயமாக மறைந்தார். எம்பெருமான் அவ்விடத்திலிருந்து மறைந்ததும் ஐயனே...!!

உமது திருவிளையாடலை நான் புரிந்து கொள்ளாமல் போனேனே...

உமது திருப்பாதங்கள் என் சிரசின் மீது பட நான் என்ன தவம் செய்தேனோ? என்று புரியவில்லையே...

என உரைத்த வண்ணம் தன்னுடைய அறியாமையை எண்ணி "தம்மானை அறியாத சாதியார்" என்று தொடங்கும் திருப்பதிகத்தை பாடினார்.


எம்பெருமானின் மீது திருப்பதிகம் பாடி முடித்ததும் தனக்கு காட்சி அளித்த எம்பெருமானை காண முடியவில்லையே... என்ற மனவேதனையுடன் துயில் கொண்டிருந்தார். மறுநாள் ஆதவன் உதிக்கையில் அவ்விடத்தில் இருந்து எழுந்து தில்லை நகருக்கு புறப்படுவதற்கான தனது பயணத்தை மேற்கொள்ளத் துவங்கினார். தில்லையின் எல்லையை அடைந்ததும் அவ்விடத்தில் இருந்து கோபுர காட்சியைக் கண்டு நிலமதில் வீழ்ந்து... வணங்கி... கொண்டிருந்த வேளையில் தில்லையில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் சுந்தரரின் வருகைக்கு முன்னரே எம்பெருமானின் திருவருளால் சுந்தரரின் வருகையை அறிந்திருந்தமையால் அவரை மிகுந்த சிறப்போடும், மகிழ்ச்சியோடும் தில்லைக்கு அழைத்து வந்தனர்.

தில்லையில் ஆடல் காட்சியுடன் காட்சி தரும் பொன்னம்பலத்தை கூப்பிய கரங்களுடன் பலமுறை வலம் வந்து அவரை வணங்கி கொண்டிருந்தார். அவ்விடத்தில் பொன்னம்பலத்தை மட்டுமே மனதில் எண்ணிய வண்ணம் சித்தம் ஒடுங்கி கண்களிலே இதுவரை எவ்விடத்திலும் காணாத ஒரு காட்சியை கண்டார். இக்காட்சியை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். மனமும், உடலும் ஒன்றிணைந்து தில்லை அம்பலத்தரசரின் ஆனந்த தாண்டவத்தில் முழுவதும் ஆழ்ந்து மூழ்கி இருந்தார்.

எம்பெருமானின் மீது கொண்ட பக்தியின் வெள்ளத்தில் பல கரைகளை உடைத்தெறியும் வண்ணம் பல பதிகங்களை அவ்விடத்தில் எம்பெருமானின் மீது பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் சுந்தரர். பதிகங்கள் பாடி முடித்து ஆனந்த நிலையில் இருந்த நிலையில் அவருக்கு மகிழ்ச்சி கொள்ளும் வகையில் மற்றுமொரு செயலானது அவ்விடத்தில் நடைபெறத் துவங்கியது. அதாவது, சுந்தரர் பாடிய அமுதத்தமிழில் மனம் மகிழ்ந்த எம்பெருமான் வான்வீதி வழியாக சுந்தரா... எம்மை காண நீ ஆரூருக்கு வருவாயாக...!! என்று அசரீரி வழியாக அவர் தன் கருத்தினை உரைத்தார்.

எம்பெருமானின் இந்த விருப்பத்தை அறிந்த சுந்தரர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். எம்பெருமானின் ஆணையை சிரசின் மீது கொண்டு தில்லையை விட்டுச் செல்ல மனமில்லாமல் தில்லையின் எல்லையில் உள்ளம் உருக நின்று கொண்டிருந்தார். எம்பெருமானின் எண்ணங்களை மனதில் நின்ற வண்ணம் கொள்ளிட நதியைக் கடந்து புறப்பட்டார் சுந்தரர்.

சீர்காழியை அடைந்த சுந்தரர் திருஞான சம்பந்தர் அவதரித்த தலத்திற்கு செல்ல அச்சம் கொண்டு அவ்விடத்தின் எல்லையில் இருந்து எம்பெருமானை வணங்கி கொண்டிருந்தார். அப்பொழுது திருதோணியப்பர் உமையவளுடன் இடபத்தின் மேல் எழுந்தருளி ஆனந்த காட்சியளித்தார். அக்காட்சியை கண்ட சுந்தரர் தோணியப்பர் "சாதலும் பிறத்தலுந் தவிர்த்து" என்ற பதிகம் ஒன்றை எடுத்து "கழுமல வளநகர் கண்டு கொண்டேனே" என போற்றினார்.

அதைத்தொடர்ந்து திருக்கோலக்காவிற்கும், திருப்புன்கூரிற்கும் சென்று அவ்விடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் மீது திருப்பதிகங்களைப் பாடினார். மேலும், காவிரி நதியை அடைந்து காவிரி மாயூரத்திற்கும், அம்பர் மாகாளத்திற்கும், திருப்புகலூரிற்கும் சென்று எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டு பின் திருவாரூரை அடைந்தார்.

எம்பெருமான் சுந்தரரின் வருகையை திருவாரூரில் இருக்கும் சிவனடியார்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் வண்ணம் அவர்களது கனவில் எழுந்தருளி என்னுடைய விருப்பத்திற்கு இணங்கி எம்மால் ஆட்கொள்ளப்பட்ட தொண்டரான சுந்தரர் இவ்விடத்திற்கு வருகை தந்து கொண்டுள்ளார். ஆகவே அவரை அனைவரும் மகிழ்வுடன் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

எம்பெருமான் ஒரு சிவனடியார் மட்டுமல்லாது அனைவரின் கனவிலும் தோன்றியதை கண்டு அனைவரும் சுந்தரர் எம்பெருமானின் பரிபூரண அருளையும் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தனர். மேலும் அவரை வரவேற்பதற்காக மிகுந்த மகிழ்ச்சியுடன் திருவாரூர் நகரத்தை திருவிழா பூண்டது போல அலங்காரம் செய்திருந்தனர்.

வீதிகள் எங்கும் மாவிலைத் தோரணங்களும்,

வாழை மரங்களும் அழகோடு அமைக்கப்பட்ட பந்தல்களுடன்...

அனைத்து இடங்களிலும் கோமிய நீரினால் சுத்தப்படுத்தி...

வீட்டு திண்ணைகள் மற்றும் பாதைகள் எங்கும் சந்தனக் குழம்பால் மொழுகி...

மாக்கோலமிட்டு...

ஆங்காங்கே பந்தல்கள்


அமைத்து இருந்தனர். பந்தலில் அழகிய முல்லை மலர்களால் தொடுக்கப்பட்ட அழகிய மாலைகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் காணும்பொழுது திருவாரூர் நகரம் ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல காட்சியளிக்க துவங்கியது.

அதாவது, இனிய மங்கள ஓசையுடன்...

பூரண பொற்கும்ப கலசத்தை கரங்களில் ஏந்திய வண்ணம்...

அன்பர்கள்... அடியார்கள் புடைசூழ...


திருக்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்த சுந்தரர், திருக்கோவில் அடையும் வழி எங்கும் தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி "கரையுங் கடலும்" என்றெடுத்து "எந்தையிருப்பது மாரூரவ ரெம்மையு மாள்வரோ கேளீர்" என்ற பதிகத்தை பாடிக்கொண்டு திருக்கோவிலுக்குள் நுழைந்தார்.

திருக்கோவிலினுள் நுழைந்தவுடனே திருவாயிலை வணங்கி எழுந்து சென்று தேவாசிரிய மண்டபத்தை வணங்கி எம்பெருமானை மனதில் எண்ணி மெய்யும், உயிரும் உருகி விழிகளில் நீர் பெருக நின்றார். மேலும், எம்பெருமானின் மீது ஆறாத காதல் கொண்டு பல பதிகங்களை பக்தி பெருக்கினால் சிரம்மீது கரம் குவித்து பாடினார். அதன்பின் பிரபஞ்சத்தின் பரம்பொருளாக இருக்கக்கூடிய எம்பெருமானின் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கினார்.

பிரபஞ்சத்தின் பரம்பொருளாக இருக்கக்கூடிய எம்பெருமானின் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கிய சுந்தரர் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே தம்மையும், இவ்வுலகையும் மறந்து ஆனந்த பெருங்கடலான திருப்பாற்கடலில் மூழ்கினார். அப்பொழுது திருவாரூர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜப் பெருமானின் அருளால் வான்வீதி வழியாக அசரீரியானது உருவாகியது. அந்த அசரீரியானது சுந்தரரே...

யாம் உமக்கு தோழர் ஆகிவிட்டோம்...

அன்று நீர் மணக்கோலத்தில் திருநாவலூரில் இருந்தபொழுது உன்னை தடுத்தாட் கொண்டோம்...

ஆனால் இனிவரும் காலங்களில் முன்புபோல மணக்கோலம் கொண்டு...

இந்த பூமியில் மகிழ்வுடன் என்றென்றும் வாழ்வாயாக...


என்று அசரீரி வாக்கின் மூலம் உணர்த்தினார்.

அசரீரியின் வாக்குகளைக் கேட்டதும் சுந்தரமூர்த்தியாரோ தியாகராஜப் பெருமானை மனதில் எண்ணி, வணங்கி அடியேனைத் தடுத்து ஆட்கொண்டு அருளிய கருணாநிதியே... உமது பெரும் கருணையை எப்படி பாடி புகழ்வேன்?... என்று பலவாறு இறைவனை துதித்து வணங்கினார். பின்பு தியாகேசர் சன்னிதியை அடைந்து வணங்கி துதித்த வண்ணம் திருக்கோவிலை வலம் வந்தார்.

எம்பெருமான் தோழராக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுந்தரர் அன்றுமுதல் "தம்பிரான் தோழர்" என்ற திருநாமத்துடன் அனைவராலும் அழைக்கப்பட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் சிலகாலம் திருவாரூரில் தங்கியிருந்து தியாகேசப் பெருமானை பைந்தமிழ் மொழியான இனிய செம்மொழியில் பலவாறாக தேனினும் இனிய அமிர்தம் போன்ற தமிழ் பாக்களால் பாமாலை சாற்றி வணங்கினார்.

எம்பெருமானின் அருளால் சுந்தரரின் திருமணமும், முன்ஜென்ம தொடர்ச்சியும் இவ்விடத்தில் இருந்து ஆரம்பிக்க துவங்கியது. கயிலாய மலையில் வீற்றிருக்கும் எம்பெருமானின் துணைவியான பார்வதி அன்னையின் சேடியர் இருவரில் ஒருத்திதான் கமலினி என்பவர். இவர் திருவாரூரில் உருத்திர கணிகையர் மரபில் பரவையார் என்னும் பெயருடன் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தார். பரவையார் சிறுவயது முதலே சிவனிடத்திலும், அவர் தம் அடியார்களிடத்திலும் எல்லையில்லா பக்தி கொண்டிருந்தாள்.

காலம் வளரவளர பரவையாரும் வளர்ந்து இளமைப்பருவம் அடைந்து தன்னவருக்காக காத்துக் கொண்டிருக்க அவரும் வருகை தந்திருந்தார். பரவையார் தினந்தோறும் காலையில் எழுந்து தூய நீராடி தியாகேசப் பெருமானை தரிசித்து வணங்கி வந்து கொண்டிருந்தார். எப்போதும் போல அன்றும் தனது சேடிகளுடன் திருக்கோவிலுக்கு சென்றிருந்தாள். அச்சமயத்தில் சுந்தரரும் அன்பர்கள் புடைசூழ எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை நோக்கி வந்திருந்தார்.

கோவிலிற்கு வந்ததும் ஓரிடத்தில் சுந்தரரும், பரவையாரும் ஒருவரையொருவர் நேருக்கு நேராக பார்க்கின்ற சந்தர்ப்பமும், சூழலும் உருவாகியது.

சுந்தரர் பரவையாரின் எழில்மிகு தோற்றத்தில்...

தம்மையும் மறந்து...

இவ்வுடலை மறந்து...

இந்த உலகத்தையும் மறந்து... நின்று கொண்டிருந்தார்.


பரவையாரும் சுந்தரரின் சுந்தர ரூப லாவண்யத்தில் மெய்மறந்து ஒரு அழகிய சிலை போல நின்று கொண்டிருந்தாள். இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் சந்திக்க துவங்கின.

விழிகள் இணைந்த பொழுதே உள்ளங்களும் இணைய துவங்கின. சுந்தரரின் அழகிய தோற்றத்தைக் கண்டதும்

இவர் என்ன முருகப்பெருமானோ? அல்லது மன்மதனோ?

அல்லது தான் என்றும் வணங்கும் அரணாரின் அருள் பெற்ற அடியாரோ?

இன்னதென்று புரியவில்லையே?

எந்த ஆடவரையும் கண்டு அவர்பால் செல்லாதே என் மனம்..

ஏனோ இவரைக் கண்டதும் இவர்பால் பணிந்து ஓடி செல்கின்றது?

என்னால் என் மனதையும் கட்டுப்படுத்த முடியவில்லையே...!


என்று பலவாறாக எண்ணி தவித்து கொண்டு தம்மையும் எண்ணி வியந்தாள்.

இருவருக்கும் இடையில் காதல் என்னும் அழகிய மலரானது பூக்க துவங்கியது. அதிக காலங்கள் அவ்விடத்தில் இருக்க இயலாத நிலையில் தன்னுடைய மனதை மட்டும் அவர்பால் தந்துவிட்டு, தன்னுடைய மெய்யை மட்டும் எடுத்துக்கொண்டு இல்லத்திற்கு புறப்பட்டாள் பரவையார். அவர் ஆலயத்தை விட்டு நீங்கியதும் அவருடைய தோற்றத்தை மனதளவில் எண்ணி உருகிக் கொண்டிருந்தார் சுந்தரர். தம்மை மயக்கிய பெண்மணி யார்? என்பதை தம் அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.

சுந்தரரிடம் காலையில் நீங்கள் பார்த்திருந்த பெண்மணியின் பெயர் பரவையார் என்றும், அவருடைய இருப்பிடத்தை பற்றியும், பெற்றோர்களை பற்றியும் கூறத் தொடங்கினார்கள். தன்னை வசியம் செய்தாற்போன்று ஈர்த்து மயக்கிய பெண்ணை பற்றிய முழு விபரத்தையும் அறிந்து கொண்டார் சுந்தரர்.

எம்பெருமானின் எண்ணங்களால் நிரம்பி வழியும் உள்ளத்தில் காதல் என்னும் விதையை ஊன்ற... என் மனமோ பரவையார் நினைவுகளோடும், பரமன் நினைவோடும் வாடி வதங்கி கொண்டிருக்கின்றது என்றெல்லாம் எண்ணினார். இவ்வாறு எண்ணிய வண்ணம் எம்பெருமானை வணங்கி தேவாசிரிய மண்டபத்தை வந்தடைந்தார் சுந்தரர். காலம் கடந்ததும் தன் பணியை செவ்வனே நிறைவேற்றிய பகலவனும் தம் வீட்டை அடைய மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். மேற்கில் அடைந்ததும் வெளிச்சம் குன்றி வானத்தில் இருளானது படரத் தொடங்கியது.

திங்களும் தன் பணியை சிரமேல் ஏற்று செய்திருக்க...

அழகிய தென்றல் காற்றும் வீச...

காமன் தொடுத்த கணையால் மிகுந்த வேதனைக்கு ஆட்பட்டார் சுந்தரர்.

அவருக்கு இந்த அழகிய சூழலாலும்,

பலவிதமான எண்ணங்களாலும் துன்பங்கள் ஏற்படத் தொடங்கின.


ஆனால் ஓர் எண்ணம் மட்டும் மகிழ்ச்சியை கொடுத்தது. அது பரவையாரின் எண்ணமாகும்.

பரவையாரும் சுந்தரரின் நினைவால் சூழ்ந்திருந்தாள். நிலவின் குளிர் மிகுந்த அழகிய பொன்னொளியில் அமைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களால் அழகு செய்யப்பட்ட அழகிய மலர் மஞ்சத்தில் தோழிகளுடன் அமர்ந்திருந்தார் பரவையார். தனது தோழியை பார்த்து தோழியரே...! இன்று காலையில் நாம் ஆலயத்திற்கு சென்றிருந்த பொழுது நாம் சந்தித்த அந்த சுந்தர அழகன் யார்? என்று ஒருவிதமான ஏக்கத்தோடு வினவினாள்.

அதற்கு அங்கிருந்த தோழிகளில் ஒருத்தி தலைவியே...! அவர்தான் தம்பிரான் தோழர் என்றும், அவர் எம்பெருமானின் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டவர் என்றும், எம்பெருமானுக்கு உற்ற அன்பு தொண்டர் மற்றும் தோழர் என்றும் கூறலாம் என்று விடையை அளித்தாள். தோழியர் மொழிந்ததைக் கேட்டதும் எம்பிரானின் உற்ற நண்பர் என்பதை அறிந்த பரவையார் சுந்தரரின் மீது ஆறா மையல் கொண்டாள். காதல் மேலிட பெருமூச்சு அவ்விடத்தில் வெளியிட்டார்.

மன்மதன் தொடுத்த மலர்க்கணையால் மனதளவில் வாடி மலர் படுக்கையில் மயங்கிய நிலையில் சுந்தரரின் நினைவுகளோடு விழுந்தாள் பரவையார்.

இரவில் உணவு உண்ணவில்லை,

உறக்கமும் கொள்ளவில்லை,

மலரின் வாசனைகளும் பிடிக்கவில்லை,

பஞ்சனையோ வெறுத்தது...

மனமோ வாடியது...

வருந்தினாள்...

காதல் என்னும் பெருங்கடலில் விழுந்து... அதில் கரையேற முடியாமல் மிகுந்த தவிப்புக்கு ஆளாகினாள்.


ஆலாலசுந்தரரையும், கமலினியும் இம்மண்ணுலகில் பிறக்க ஆணையிட்ட எம்பெருமான் அவர்களை இணைக்கும் பொருட்டு அதற்கான பொறுப்புகளையும், பணிகளையும் அவரே மேற்கொண்டார். அதாவது, அடியார் கனவுகளில் எழுந்தருளிய எம்பெருமான் சுந்தரருக்கும், பரவையாருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு ஆணையிட்டார்.

இறைவன் சுந்தரர் கனவில் எழுந்தருளி பரவையாரை உமக்கு மணமுடித்து வைக்குமாறு எமது அடியவர்களுக்கு ஆணை பிறப்பித்து உள்ளோம் என்று கூறிய வண்ணம் மறைந்தருளினார். பரவையார் கனவிலும் எம்பெருமான் எழுந்தருளி உம்மை தம்பிரான் தோழன் திருமணம் புரிந்து கொள்வான் என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். பொழுதும் முடிந்தது... திங்கள் மறைந்து ஆதவன் தோன்ற... எம்பெருமானை வழிபடும் அடியவர்கள் அனைவரும் திரளாக வந்து சுந்தரரை வணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் கூறிய ஆணையை அவரிடத்தில் கூறினார்கள்.

அடியவர்கள் கூறியதைக் கேட்டதும் சுந்தரர் அகமும், முகமும் கதிரவனைக் கண்ட சூரியகாந்தி போல மிகவும் பிரகாசமாக பூக்கத் தொடங்கியது. அதைப்போலவே அவர்கள் பரவையாரை சந்தித்து எம்பெருமானின் சித்தத்தை கூறினார்கள். பரவையாரும் மிகுந்த பரவசம் கொண்டாள். அடியவர்கள் அனைவரும் இவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள துவங்கினார்கள். இனியதொரு சுபமுகூர்த்த நாளில் சுந்தரர் மற்றும் பரவையார் ஆகிய இருவரின் திருமணமானது அடியார்களின் முன்னிலையிலும்;, பெற்றோர்களின் ஆசிகளுடனும், பரம்பொருள் துணையோடும், வாழ்த்துக்களுடனும் நடந்தேறியது.

இல்லற தர்மப்படி சுந்தரர், பரவையார் இருவரும் இணைந்து இல்வாழ்க்கையில் ஈடுபட துவங்கினர். கணவன், மனைவியாக இருவரும் இணைந்து தங்கள் வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவுகளையும், விருந்துகளையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளையும் எவ்வித தவறுமின்றி, குறையுமின்றி நன்முறையில் செய்து வந்தனர்.

அடியவர்களுக்கு வேண்டிய பொருள் உதவியையும், அவர்கள் தேவையை நிறைவேற்றும் பொழுதும், தம்பதியர் இருவருக்கும் கிடைத்த மன மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாததாக இருந்தது. பரவையாரும், சுந்தரரும் கூடி வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் சுந்தரர் மட்டும் ஒருநாள் கோவிலுக்கு தனியாக வந்திருந்தார். அப்பொழுது கோவிலில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார்கள் பலர் கூடிநின்று கொண்டிருந்தனர்.

அடியார்களை வழிபடுவதற்குரிய தகுதியும், பக்தியும் இன்னும் தமக்கு ஏற்படவில்லையே என்று எண்ணியவாறு அவர்களை மனதில் எண்ணி போற்றினார். பின்பு இவர்களுக்கு எப்பொழுது நான் அடியேன் ஆகும் நாள் வருமோ? என்றவாறு எண்ணிய வண்ணம் அடியார்களை மனதில் எண்ணி வணங்கிய வண்ணம் பரம்பொருளான எம்பெருமானை வணங்குவதற்காக அடியார்களிடத்திலிருந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தார்.

சுந்தரர் மனதில் எண்ணிய எண்ணம் எம்பெருமானின் அருளால் நிறைவேற தொடங்குவதற்கான காலகட்டங்களும் அவர் எண்ணத் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து நிகழத் தொடங்கியது. தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த அடியார்கள் கூட்டத்தில் விரல் மிண்ட நாயனார் ஒருவர் இருந்தார். அவர் இவருடைய செயல்களை தவறாக எண்ணிக்கொண்டு சுந்தரருடைய நல்ல எண்ணத்தை உணர்ந்து கொள்ள இயலாமல் சுந்தரரின் மீது சினம் கொண்டார்.

அதாவது, அவர் செவிகளில் விழும் வண்ணம் முதலில் வணங்குவதற்கு உரிய அடியார்களை வணங்காமல் கோவிலுக்கு சென்று பரம்பொருளை வணங்கி என்ன பயன்? என்றும், இதையும் அறியாத வன்றொண்டன் அடியார்களுக்கு புறம்பானவன் என்றும், அவனைவிட அவனை வழியே சென்று ஆட்கொண்ட எம்பெருமான் அடியார்களுக்கு புறம்பானவன் என்றும் கடுமையாக அனைவரும் கேட்கும் வண்ணம் உரைத்து சொன்னார்.

விரல் மிண்ட நாயனார் கூறியதைக் கேட்டதும் அவர் மீது எவ்வித கோபமும் கொள்ளாமல் அவர் அடியாரிடத்தில் எவ்வளவு அன்பும், பக்தியும் கொண்டுள்ளார் என்பதையும், அவருடைய எண்ணத்தையும், செயல்பாடுகளையும் எண்ணி மனதில் பெருமை கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் கொண்ட அந்த எண்ணத்துடனேயே எம்பெருமான் வீற்றிருக்கும் மூலவர் தளத்தை சென்றடைந்தார். அங்கே சென்றதும் எம்பெருமானை வணங்கி,

பரம்பொருளே...

அடியார்களுக்கெல்லாம் அடியாராகும் பேரின்ப நிலையை...

எமக்குத் தந்தருள வேண்டுமென்று...


மனமுருகி எம்பெருமானிடம் வேண்டினார் சுந்தரர்.

யாரும் அறியா வண்ணம் அவருடைய எண்ணமானது செயல்படத் தொடங்கியது. அதாவது, காரணமின்றி காரியமில்லை என்பது போலவே அவரும் எம்பெருமானிடம் கேட்க... எம்பெருமானும் அவ்விடத்தில் எழுந்தருளினார். எம்பெருமானை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த சுந்தரர் அவரை வணங்கி தமது எண்ணத்தை வெளிப்படுத்திய வண்ணம் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது எம்பெருமான் சுந்தரரை நோக்கி,

சுந்தரா...!

எம்மை வழிபடும் அடியார்களின் பெருமைகளையும்,

அவர்களுடைய திறமைகளையும் மொழிந்து அவர்களை பற்றிய அருமைமிக்க, எழில் மிகுந்த தமிழ் பாக்களால் பாடுவாயாக...


என்று திருவாய் மலர்ந்தருளினார்.

பரம்பொருளின் விருப்பத்தை அறிந்ததும் மகிழ்ச்சி கொண்டார் சுந்தரர். ஆயினும் மனதளவில் சிறிது அச்சமும் கொண்டிருந்தார். ஏனெனில் எம்பெருமானை வழிபடும் அடியார்களை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதல்லவா? யான் எப்படி தங்களை வழிபடும் அடியார்களைப் பற்றி பாட இயலும்? மேலும் தங்களை வழிபட்டு கொண்டிருக்கும் திருத்தொண்டர்களை பற்றி பாடுவதற்கு இந்த எளியோனுக்கு எவ்வித தகுதியும் கிடையாது அல்லவா? என்று எண்ணினார்.




Share this valuable content with your friends