🌟 இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆடி அமாவாசையான இன்று நிகழும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணம், பகுதிநேர சூரிய கிரகணம் என்றும், அப்போது சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
🌟 ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 17ந்தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் ஏற்பட்டது. பின்னர் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்ந்தது. தற்போது இன்று மீண்டும் பகுதி நேர சூரிய கிரகணம் நடக்கவுள்ளது.
🌟 இந்த கிரகணம் சுமார் மூன்றரை மணி நேரம் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் பகுதி நேர சூரிய கிரகண நிகழ்வு மதியம் 3.16 மணி வரை நீடிக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
🌟 இன்று நடைபெறும் பகுதிநேர சூரிய கிரகணம், வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும், ஆசியாவை பொறுத்தவரை வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருக்கும் சில பகுதிகளிலும் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தெளிவாக காண இயலாது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
🌟 பெண்மை என்னும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். சூறைக்காற்றோடு அம்மனின் அருள் காற்றும் சேர்ந்து அரவணைக்கும் மாதமும் ஆடி மாதம் தான்.
🌟 பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடி மாதம் அம்மனின் மாதமாக இருக்கட்டும் என வரம் அளித்தார். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட அம்மனுக்கு சக்தி அதிகமாக காணப்படும்.
ஆடி அமாவாசை :
🌟 ஆடி மாதத்தில் சந்திரன் தனது சொந்த வீட்டில் இருக்கிறார். அப்போது சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் தான் ஆடி அமாவாசை.
🌟 சூரிய பகவான் ஆண்மை, வீரம், ஆற்றல் என்பனவற்றை தரும் ஆற்றல் கொண்டவர். சந்திர பகவான் மகிழ்ச்சி, அறிவு, இன்பம், உற்சாகம் இவற்றையெல்லாம் தருபவர். தாய் தகப்பன் இல்லாதவர்கள் அமாவாசை நாளில் சூரியன், சந்திரனை வணங்குதல் சிறப்பு.
🌟 தட்சிணாய காலம் ஆரம்பத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை மிக சிறப்பு வாய்ந்தது.
🌟 ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஆறு மாதங்களுக்கு தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.
பித்ரு வழிபாடு :
🌟 ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிட வேண்டும். ஏதேனும் ஒரு தீர்த்தக் கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வர வேண்டும்.
🌟 மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்க வேண்டும். பின்னர் தீபாராதனை காட்டி, காகத்திற்கு உணவளிக்க வேண்டும். பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
🌟 முன்னோரை உரிய காலத்தில் வணங்கினால் அனைத்துவிதமான நன்மைகளையும் பயக்கும். வருடத்தில் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது நமது வேதம்.
🌟 அனைத்தையும் செய்யாவிட்டாலும் ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளில் மட்டும் அவசியம் செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் மகாளய பட்சத்தில் செய்ய வேண்டும்.
தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் :
🌟 நம் முன்னோர்கள் இறந்த அந்த திதி, அந்த பட்சம் மற்றும் அந்த மாதத்தில் தான் சிரார்த்தம் செய்ய வேண்டும். முன்னோர்கள் இறந்த நாள் அல்லாமல் அவர்கள் இறந்த நட்சத்திரத்தில் செய்யக்கூடாது. ஏனெனில் அன்று திதி மாறுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, இறந்த திதியில் தர்ப்பணம் செய்வதே உத்தமம்.
🌟 இவ்வாறு நாம் செய்யும் தர்ப்பணங்களால் முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசி வழங்குவார்கள். இதனால் நாமும் நம் சந்ததிகளும் இனிதே வாழ முடியும். மேலும், குல தெய்வத்தை வணங்குவதற்கு சிறந்த காலமாக இந்த ஆடி அமாவாசை விளங்குகிறது.