மேஷம் :
இவர்கள் வெற்றி பெறுவது ஒன்றையே இலட்சியமாக கொண்டிருப்பவர்கள். இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது, மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். இவர்கள் தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் கூட.
ரிஷபம் :
தோற்றத்தால் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றம் காணச் செய்யும் ரிஷப ராசிக்காரர்கள் சீற்றம் இல்லாமல் பேசும் தன்மை பெற்றவர்கள். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள்.
மிதுனம் :
அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாக தன்மையும் உடையவர்கள். புதுமை செய்வதிலும் புரட்சி செய்வதிலும் புகழ் கொடி நாட்டும் இவர்கள் மிகப்பெரிய காரியங்களைக்கூட மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள்.
கடகம் :
வைராக்கிய மனம் பெற்ற இவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள். பொது நலத்தில் ஈடுபாடு கொண்ட இவர்களை மக்கள் போற்றி கொண்டாடுவார்கள்.
சிம்மம் :
எவருக்கும் அடங்காத தன்மையும், அடக்க வேண்டும் என்கிற சர்வதிகார போக்கும் உடையவர்கள். சீறும் குணத்தை பெற்றிருந்தாலும் மக்களைச் சீர்தூக்கி எடைபோடும் ஆற்றலும் அதனை செயல்படுத்தும், விதமும் அருமை.
கன்னி :
பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம்.
துலாம் :
மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். மற்றவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்கு கைராசி மிக்கவர்கள் என்று இவர்களை அழைப்பார்கள்.
விருச்சிகம் :
கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறத்தாலும் மக்களைக் கவருவார்கள். தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள். பத்திரிக்கை, ஆன்மீகம், கலைத்துறை, ஜோதிடம் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான துறைகளாகும்.
தனுசு :
அன்பு, பொறுமை, பக்தி, நாணயம் அனைத்திலும் இவர்கள் கவரிமான் பரம்பரை என்று தான் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டு செயல்படுவதோடு உறுதியோடு நின்று இறுதிவரை போராடுவார்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும்.
மகரம் :
இனிமை குணத்தோடு காட்சியளிக்கும் இவர்கள் வைராக்கிய மனம் பெற்றவர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் ஓர் தனி முத்திரையைப் பதித்து விடுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு வெற்றி கிடைக்கும்.
கும்பம் :
எவ்வளவு உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். தன் வாழ்வில் வரும் சந்தோஷமானாலும் சரி, சங்கடமானாலும் சரி பிறரிடம் சொல்லாமல் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறி தேற்றிக் கொள்வார்கள். படிப்பை விட அனுபவத்தால் உயர்நிலை அடைபவர்கள்.
மீனம் :
மற்றவர்கள் செய்ய முடியாத காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். பிறரது மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றார்போல் செயல்படுவார்கள். வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பார்கள். இவர்களுக்கு பதவி தானே தேடிவரும். அதுதான் இவர்களின் தனித்தன்மை.
இது பொதுப்பலன்களே. ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.