No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் : மீண்டும் பிறப்பெடுத்த தாட்சாயிணி தேவி..! பாகம் - 15

Jun 27, 2018   Vahini   628    சிவபுராணம் 

சிவபெருமான் கைலாய மலையில் ஒரு குகையினுள் சென்று எவரும் அறியா வண்ணம் கடும் தவம் செய்ய சென்று விட்டார். அவரைத் தொடர்ந்து நந்திதேவரும் சிவபெருமான் தவம் செய்யும் குகையின் வெளியே தவம் முடித்து வரும் எம்பெருமானின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தார். சிவன் தவம் செய்ய சென்றதும் அவர் இல்லை என்று தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த தாரகாசுரன் மூவுலகையும் கைப்பற்ற தடை ஏதும் இல்லை என்று இறுமாப்புடன் தன் படைகளை அனுப்பினான்.

அசுரர்களின் அழியா வேந்தனான தாரகாசுரன் மூவுலகில் ஒன்றான பூவுலகில் ரிஷிகள் மற்றும் முனிவர்கள் செய்யும் தவத்திற்கும் அவர்கள் வளர்க்கும் வேள்விகளை அழிக்கும் பொருட்டு அனைத்து அசுரர்களையும் அனுப்பினான்.

தேவலோகத்தில் உள்ள தேவர்களை செயல் இழக்க செய்ய வேண்டுமாயின் அவர்களின் அமிர்பாதத்தை தடைசெய்ய வேண்டும். அவர்களின் அமிர்பாதம் என்பது மானிடர்கள் மற்றும் ரிஷிகள் மற்றும் முனிவர்கள் வளர்க்கும் வேள்வியில் இருந்தே கிடைக்கப்பெறுகின்றனர்.

அதை அவர்களுக்கு கிடைக்கா வண்ணம் செய்து விடில் அவர்களை எளிதில் வெற்றி கொள்ள இயலும் என்பதை பொருட்டே அசுரர்கள் மானிடர்கள் நடத்தும் வேள்விகளை தடுத்தும் அழித்தும் வந்தனர்.

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் பல யுகங்கள் மேற்கொண்ட தவத்தில் மயங்கி எம்பெருமானான சிவபெருமான், சுக்கிராச்சாரியார் முன் தோன்றி உம் தவத்தால் யாம் அகம் மகிழ்ந்தோம், வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார்.

சுக்கிராச்சாரியார் தாம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த வரமான சஞ்சீவினி மந்திரத்தை தமக்கு அருளுமாறு வேண்டி நின்றார். சஞ்சீவினி மந்திரம் மூலம் இறந்தவர்களை உயிர் பெறச் செய்ய இயலும். இம்மந்திரம் அறிந்தவர் பரம்பொருளான எம்பெருமான் மட்டுமே.

சிவபெருமான் தன்னுடைய வாக்குறுதியை காக்கும் பொருட்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் சஞ்சீவினி மந்திரத்தை அருளினார். இந்த அசுரர்களின் செயல்பாடுகளால் பலவிதமான இன்னல்களுக்கு மானிடர்கள் ஆளானார்கள். மானிடர்கள் வேள்வி எதும் செய்யாததால் தேவர்களும் பலம் இழந்து வந்தனர். இவையாவற்றையும் அறியாமல் தேவேந்திரன் தேவலோக கன்னிகளின் நடனத்தில் மயங்கி இருந்தார்.

தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி அச்சமயம் சபைக்கு வருகை தர அவரை சரியான முறையில் வரவேற்காமல் அவரை உதாசினப்படுத்தினார். பல முறைகளில் பொறுமையுடன் இவ்விஷயத்தை பெரிய பொருட்டாக எடுத்து கொள்ளாத பிரகஸ்பதி இம்முறையில் இதை பெரிதாக எடுத்துக் கொண்டு இனி நான் இந்திர சபையை புறக்கணிக்கிறேன் என்று கூறி மறைந்தார்.

மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலை புரியும் பிரம்ம தேவர் தாரகாசுரனின் பதவி மோகத்தால் மக்கள் அடையும் துன்பங்களையும், தேவர்கள் அடையும் இன்னல்களையும் கண்டு வெகுண்டார். இந்நிகழ்வினை பற்றி காக்கும் கடவுளான திருமாலிடம் சென்று பிரம்ம தேவர் முறையிட்டார்.

மேலும் தேவர்களும், தாரகாசுரனின் அசுரப் படைகளால் அடைந்த இன்னல்களை காக்கும் கடவுளான திருமாலிடம் முறையிட்டனர். இவையாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த திருமால் சூரியன் மறைவு இருக்கும் பட்சத்தில் சூரிய உதயம் என்பதும் இருக்கும். சிவபெருமானின் தவத்தை களைத்து அவரை குடும்பத்தில் ஈடுபடுத்த அவரின் துணைவி இப்பூவுலகில் பிறந்துள்ளார் என்றும், காலம் வரும் வரை காத்திருங்கள் என்றும் கூறினார்.

அவரின் கூற்றுக்கு ஏற்ப தாட்சாயிணி தேவி மீண்டும் பிறப்பெடுத்துள்ளார். இமய மலையின் அருகில் இமவானுக்கு(இமயமலை மன்னன்) மகளாக தாட்சாயிணி தேவி பிறந்தார். இமவானுக்கும், மேனைக்கும் மகளாக பிறந்துள்ள தாட்சாயிணி தேவிக்கு அவர்கள் பார்வதி என்னும் பெயரை சூட்டி வளர்த்து வந்தனர்.

பார்வதிதேவி சிறு வயதில் இருந்தே சிவன் பற்றிய எண்ணங்களுடன் வளர்ந்து வந்தார். தாரகாசுரன் தன்னுடைய படை பலத்தால் பூவுலகில் தனது ஆட்சியை நிறுவிய அடுத்து கட்டமாக, தேவலோகத்தை கைப்பற்ற, தான் தேவலோத்தை நோக்கி படையெடுத்து வருவதாகவும், போரை விரும்பவில்லை என்றால் தேவலோகத்தை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு கூறுங்கள் என்று தன் ஒற்றர்களிடம் கூறினான்.

தேவலோகத்திற்கு வந்த ஒற்றர்கள் தேவேந்திரனிடம் தாரகாசுரன் கூறிய யாவற்றையும் கூறினர். அசுரலோகத்தில் இருந்து வந்த ஒற்றனின் கூற்றால் மிகவும் சினம் கொண்ட தேவேந்திரன் நான் போருக்கு தயாராக உள்ளேன் என்று கூறி தாராகாசுரனிடம் இருந்து வந்த ஒற்றனிடம் கூறினார்.

பார்வதிதேவி விவரம் அறியா வயதில் இருந்த சிவ சிந்தனைகளை விட தன்னுடைய இளம் வயதில் சிவபெருமானை பற்றிய சிந்தனைகள் மேலோங்கின. சிவ சிந்தனைகளுடன் இருந்த பார்வதிதேவி தன் தாயிடம் சிவ சிந்தனைகளில் இருந்த சந்தேகங்களை வினவிய போது சிவ சிந்தனைகளை வளர்க்கக்கூடாது என்று சொல்லி பார்வதிதேவியின் தாய் கண்டித்தார்.


Share this valuable content with your friends