சிவபுராணம் : ஒரே இடத்தில் இரண்டு சிவபெருமானை கண்ட தாட்சாயிணி தேவி! பாகம் - 09
Jun 26, 2018 Vahini 600சிவபுராணம்
சிவனின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத தாட்சாயிணி தேவி மீண்டும் அதிர்ச்சியில் உரைந்தார். சிவன் உரைத்த வாக்குறுதி நினைவுக்கு வர என்ன சொல்வது என்று புரியாமல் நின்றார். ஏனெனில், ஒரு புறம் தன்னை ஈன்றெடுத்த தந்தை மறுமுனையில் தன்னை கரம் பிடித்த கணவன்.
தாம் சொல்லும் முடிவால் யாராவது ஒருவரின் மனம் கண்டிப்பாக புண்படும் என்பதை அறிந்த தாட்சாயிணி தன் முடிவை சொல்ல ஆயத்தமானார். பிரஜாபதியான தட்சன் தன் மருமகனான சிவன் தன் மனைவியான தாட்சாயிணி தேவியின் முடிவுக்கு உட்பட்டு நடப்பேன் என்று கூறியதில் மகிழ்ந்தார்.
ஏனெனில் தான் பெற்ற மகள் ஒரு போதும் தன் பேச்சை மீறமாட்டாள். எனவே எம்பெருமானான சிவபெருமானும் என்னுடைய பேச்சிற்கு கட்டுபட்டு நடப்பார் என மனதில் செருக்கு கொண்டார்.
ஆனால், அங்கு நிகழ்ந்ததோ வேறு. தாட்சாயிணி தேவி தன்னுடைய கணவர் கைலாய மலையிலே தான் இருப்பார் என்று திடமாக கூறினார். இதை சற்றும் எதிர்பாராத பிரஜாபதியான தட்சன் திகைப்புற்று நின்றார்.
தன்னுடைய மகளை சமாதானம் செய்ய முயன்றும் பலனின்றி போனது. நாம் நினைத்த எண்ணம் அரங்கேறவில்லையே என்னும் ஆதங்கத்துடனும், வருத்தத்துடனும் தன் மகளிடமிருந்து பிரியா விடை பெற்று சென்றார்.
இந்நிலையில் பிரம்ம தேவர் அனைத்து தேவ தேவியர்களையும் அழைத்து ஒரு வேள்வி நடத்த ஏற்பாடு செய்தார். அந்த வேள்விக்கு சிவபெருமான் மற்றும் திருமாலும் அழைக்கப்பட்டனர். பிரம்ம தேவரின் மகனான பிரஜாபதியும் கலந்து கொள்ள அழைப்புகள் விடுக்கப்பட்டன.
இந்த செய்தியை தன் ஒற்றர்கள் மூலம் தாரகாசுரன் அறிந்தார். இன்று தான் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று கூறி மகிழ்ந்தார். பின் தன் படையில் உள்ள வீரர்களில், எளிதில் ஒருவரின் உருவத்தை போல் மாறக் கூடியவர்களை அனுப்பி சிவபெருமானையும், தாட்சாயிணி தேவியையும் தனித்தனியே பிரித்து தகுந்த நேரத்தில் தனிமையில் இருக்கும் தாட்சாயிணி தேவியை கொல்ல ஆணை பிறப்பித்தார்.
கைலாய மலையில் இருந்து சிவனும், தாட்சாயிணி தேவியும் வெளிவரும் தருணத்திற்கு அசுரர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த தருணமும் வந்தது. சிவனும், தாட்சாயிணி தேவியும் தனிமையாக வனத்தில் இருந்த நேரத்தில் சிவனுக்கு பிடித்தவரான நந்தி வலியுடன் இருப்பது போன்ற குரல் தூரத்தில் கேட்டது. இதை கேட்டதும் தாட்சாயிணி தேவி தன் கணவரான சிவபெருமானிடம் நந்திக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை போக்குமாறு கூறினார்.
ஆனால், சிவபெருமான் நந்திக்கு ஒன்றும் ஆகாது தேவி என ஆறுதல் கூறினார். மீண்டும் மீண்டும் அந்த வலியுடன் வந்த குரலை கேட்டு தேவி பயந்து நந்திக்கு ஏதோ ஆபத்து என எண்ணி சிவபெருமானை அனுப்பினார்.
இங்கு நடக்க போவதை உணர்ந்த சிவபெருமானும் தேவியின் கூற்றுக்கு இணங்கி அவரும் நந்தியின் குரல் வந்த திசையை நோக்கி சென்றார். சிவபெருமான் மறைந்த அந்த நொடியில் சிவபெருமான் போல் உருவம் தரித்து அங்கு அசுரன் உதயமானான். சிவபெருமானை கண்ட போது எம்பெருமானே நந்திக்கு என்ன ஆயிற்று என்று வினவி அசுரனின் அருகில் சென்றார்.
தாட்சாயிணி தேவி அசுரனின் அருகில் செல்லும் போது சிவபெருமான் உதயமானார். ஒரே இடத்தில் இரண்டு சிவபெருமானை கண்ட தாட்சாயிணி தேவி திகைப்புடன் காணப்பட்டார். இரண்டு சிவபெருமானில், சிவபெருமான் உருவம் எடுத்த அசுரன் தேவியே யாமே உண்மையான சிவபெருமான் என்று கூற தேவி அசுரனின் அருகில் செல்ல பரம்பொருளான சிவபெருமான் தேவி நான் யார் என்று நீர் அறியவில்லையா என கூறினார்.
இருவரின் பேச்சுகளால் குழம்பிய தாட்சாயிணி தேவி யார் என் கணவர் என்று நானே அறிகிறேன் என்று கூறி வலது புறமாக இருக்கும் மாய தோற்றத்தில் உதயமான சிவபெருமானாக இருக்கும் அசுரனின் அருகில் சென்றார். சிவபெருமானின் கண்களை மட்டும் தான் கண்டார். அந்த கண்ணில் வெறியும், கோபமும் இருந்ததை உணர்ந்த தாட்சாயிணி தேவி இடதுபுறமாக இருக்கும் சிவபெருமானை நோக்கி நகர்ந்தார்.
இடதுபுறத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை கண்டார். அதில் அன்பும், உயிர்கள் மீது உள்ள கருணையும் மட்டுமே தென்பட்டன. இவரே என் கணவர் என அணைத்துக் கொண்டார் தாட்சாயிணி தேவி.
வலது புறத்தில் இருந்த போலியாக உருவம் கொண்ட சிவபெருமான் வடிவத்தில் இருந்த அசுரன் தன் சுய உருவத்தை எடுத்தான். தேவியே உன்னை கொல்லவே யான் இங்கு அனுப்பப்பட்டவன். இம்முறை எவ்வித பிழையும் இன்றி நான் உன்னை கொன்றே தீருவேன் என்று கூறினான்.